உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியில் (பாராலிம்பிக்) பங்கெடுத்த சிங்கப்பூர் வீரர்களைச் சிறப்பிக்கும் வகையில் நேற்று கௌரவ ஊர்வலம் நடைபெற்றது. சிங்கப்பூரைப் பிரதிநிதித்த 13 வீரர்கள் ஃபெராரி கார்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் பாராலிம்பிக் போட்டியில் சிங்கப்பூருக்கான இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற யிப் பின் சியூவும் இடம்பெற்றார். நேற்றுக் காலை செங்காங் விளையாட்டு மையத்தில் ஊர்வலம் தொடங்கியது. அங்கிருந்து ஹவ்காங் விளையாட்டு மையம், பிராடல் ஹைட்ஸ் சமூக மன்றம், பென்டிமியர் சாலையில் உள்ள புளோக் 43, 44, புகிஸ் ஜங்ஷன் வழியாக ஊர்வலம் தேசிய நூலகத்துக்குச் செல்கிறது.
"நான் பின் சியூ பற்றி நாளிதழ்களில் படித்துள்ளேன். இன்னும் கடுமையாக உழைக்கவும் சிறந்து விளங்கவும் அவர் எனக்கு ஓர் ஊக்குவிப்பாகத் திகழ்கிறார். பொது மேடை உரையில் அவரைப் பற்றிப் பேச இருக்கிறேன். அவரை நேரில் காண விரும்புகிறேன்," என்று செங்காங் வட்டாரத்தில் தமது பெற்றோருடன் ஊர் வலத்தைக் காண வந்திருந்த ஜொயேன் சூ தெரிவித்தார். தங்கப் பதக்கங்கள் வென்ற யிப் வசிக்கும் சிராங்கூன் வட்டாரத்தை ஊர்வலம் கடந்த போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து ஆதரவு தெரிவித்தனர். ஊர்வலம் தேசிய நூலகத்தை அடைந்தபோது பாராலிம்பிக் வீரர்களை 100க்கும் மேற்பட்டோர் அவர்களை வரவேற்றனர். வீரர்களின் பங்களிப்புக்கு நன்றி கோரி அவர்களை வரவேற்ற வர்களில் 'பீஸ் கனெக்ட்' அமைப் பின் தொண்டூழியர்கள், கம்போங் கிளாம் வட்டாரத்தைச் சேர்ந்த முதியோர், பாத்லைட் பள்ளி மாணவர்கள் ஆகியோர் அடங் குவர். தங்க மகள் யிப் பயின்று வரும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம் அனைத்து வீரர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கியது.
ஊர்வலம் வந்த வீரர்களை வரவேற்றவர்களில் சிங்கப்பூரின் முன்னாள் ஒலிம்பிக் வீரரான 74 வயது திரு சி. குணாளனும் ஒருவர். "இந்த வீரர்கள் பல ஆண்டு களாக இந்தத் தனித்தன்மை வாய்ந்த செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப் பற்றிப் பலருக்கு அப்போது தெரிய வில்லை. அப்போது இந்த வீரர் களுக்குப் போதுமான ஆதரவும் கிட்டவில்லை. "பாராலிம்பிக் போட்டியின்மீது பொதுமக்களுக்கு ஆர்வம் பிறந் திருப்பதைக் கண்டு மகிழ்கிறேன். இந்த ஆர்வம் தொடரவேண்டும் என்று விரும்புகிறேன்," என்றார் திரு குணாளன். ஊர்வலத்தில் பங்கேற்ற வீரர்களை தேசிய நூலகத்தில் தொடர்பு, தகவல் அமைச்சர் டாக்டர் யாக்கூப் இப்ராஹிமும் ஊர்வலம் நிறைவடை யும் இடமான விவோசிட்டியில் கலாசார, சமூக, இளையர் அமைச்சர் கிரேஸ் ஃபூவும் சந்திப்பர். இதற்கிடையே, நாடாளு மன்றம் கூடும்போது பாராலிம்பிக் வீரர்களை அங்கு கௌரவிக்க அவர்களை நாடாளுமன்றத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக் கிறார் அமைச்சர் ஃபூ.
பிராடல் ஹைட்ஸ் சமூக மன்றத்துக்கு வெளியே கூடியிருந்த ரசிகர்கள் அவ்வழியாக ஃபெராரி கார்களில் ஊர்வலம் சென்ற சிங்கப்பூர் பாராலிம்பிக் வீரர்களை வரவேற்று ஆதரவு தெரிவித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்