அகமதாபாத்: இந்தியாவின் அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணக் கபடிப் போட்டியில் ஈரான் அதன் மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 'பி' பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கென்யா அணியுடன் ஈரான் மோதியது. இதில் ஈரான் 33-28 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. ஈரானின் மின்னல் வேக ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து ஆடப் பெரிதும் முயற்சி செய்தனர் கென்ய வீரர்கள்.
கடுமையான போட்டி நிலவி யதில் கண் சிமிட்டும் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. கென்ய வீரர்களின் முயற்சிகளை நிதானமாக எதிர்கொண்ட ஈரான் குழு, வெற்றியைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டது. ஈரான் அணி ஏற்கெனவே 52-15 என்ற கணக்கில் அமெரிக் காவையும் 62-43 என்ற கணக்கில் தாய்லாந்தையும் வீழ்த்தி இருந்தது. இதன் மூலம் 15 புள்ளிகளுடன் அந்த அணி முதல் இடத்தில் இருக்கிறது. 'ஏ' பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 68-45 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தியது. இது ஆஸ்திரேலியா பெற்ற முதல் வெற்றியாகும்.
தம்மைச் சுற்றி வளைத்து மடக்கிப் பிடிக்க முயலும் கென்ய வீரர்களிடமிருந்து தப்பிக்க குதிக்கும் ஈரானிய வீரர். ஈரானிய வீரர்கள் தங்கள் அபாரத் திறனை வெளிப்படுத்தி புள்ளிகளைக் குவித்தனர். படம்: இணையம்