ஸ்டாக்ஹோம்: மும்முறை வெற்றியாளரான ஸ்பெயின் காற்பந்து அணி, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் யூரோ கிண்ணக் காற்பந்து இறுதிச் சுற்று போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளது.
யூரோ 2020 கிண்ணப் போட்டிகளில் விளையாட ஒரே ஒரு புள்ளி மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ஸ்பெயின் அணி நேற்று அதிகாலை சுவீடனை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது.
ஆட்டத்தின் முதல் 20 நிமிடங்களில் ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியதால் அவ்வணி எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுவீடன் கோல்காப்பாளர் ராபில் ஓல்சன் அற்புதமாகச் செயல்பட்டு, ஸ்பெயினின் கோல் முயற்சிகளை எல்லாம் தவிடுபொடியாக்கினார்.
இந்நிலையில், பிற்பாதியின் தொடக்கத்தில் சுவீடன் தாக்குதல் ஆட்டக்காரர் மார்க்கஸ் பெர்க் தலையால் முட்டி கோலடித்து, தமது அணியை முன்னிலை பெறச் செய்தார். அவ்வணி வீரர் ராபின் குவைசனின் கோல் முயற்சியை முறியடித்தபோதும் ஸ்பெயின் கோல்காப்பாளர் டாவிட் ட கியா காயம் அடைந்து வெளியேற நேரிட்டது.
இடைநிறுத்தத்திற்காக இறுதியில் சேர்க்கப்பட்ட கூடுதல் நேரத்தில் ரோட்ரிகோ மூலம் வந்த கோலால் ஸ்பெயின் தோல்வியில் இருந்து தப்பித்தது. இறுதியில், ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிய, ஸ்பெயினுக்குத் தேவையான ஒரு புள்ளி கிடைத்தது.
இதற்கிடையே, இவ்வாரம் ஞாயிறன்று முதலிடத்தில் உள்ள லிவர்பூல் குழுவிற்கெதிராக முக்கியமான இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் குழு மோதவிருக்கும் நிலையில், ட கியாகாயமடைந்திருப்பது அக்குழுவைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.