மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவில் புது வரவான நைஜீரிய வீரர் ஒடியோன் இகாலோ, நாளை அதிகாலை நடைபெறும் செல்சி உடனான இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் சிறப்பாக விளையாட, மேன்யூ வீரர்களை நன்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என அக்குழுவின் நிர்வாகி ஒலே குனார் சோல்சியார் கருத்துரைத்துள்ளார்.
நாளை நடைபெறும் இந்த ஆட்டத்தில்தான் மேன்யூ வீரர்களை இகாலோ முதன்முறையாக சந்திப்பார். சீனக் குழுவான ஷங்ஹாய் கிரீன்லந்து ஷென்ஹுவா குழுவுக்காக விளையாடி வந்த இவரை மேன்யூ இரவல் பெற்றுள்ளது. கடந்த மாதம் 31ஆம் தேதி மேன்யூவில் இகாலோ இணைந்தார்.
இதற்கு முன்னதாக சீனாவில் இருந்த இகாலோவுக்கு ஒருவேளை கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருந்தால், மற்றவர்களுக்கு கிருமி பரவாமல் இருப்பதை உறுதிசெய்ய மான்செஸ்டரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், மான்செஸ்டரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இவர், இரு வாரங்களாக தனியாக பயிற்சி செய்து வருகிறார்.
ஸ்பெயினில் நடந்து முடிந்த மேன்யூவின் குளிர்காலப் பயிற்சி முகாமில் இகாலோ கலந்துகொள்ளாவிட்டாலும், செல்சியின் சொந்த மண்ணில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்க ஆயத்தமாக உள்ளார்.
காயம் காரணமாக தாக்குதல் வீரர் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் தற்போது மேன்யூவிற்காக விளையாட முடியாத நிலையில், இகாலோவின் சேவை மேன்யூவிற்கு பெரிதும் தேவை எனச் சொல்லப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக சீனாவில் விளையாடி வந்த இகாலோவை மேன்யூ இரவல் வாங்கியிருப்பது ரசிகர்களிடையே விமர்சனத்திற்கு உள்ளாகியது. மேன்யூ எதிர்பார்க்கும் உயர்தரம் இகாலோவிடம் இல்லை என்பது பலரது கருத்து.
அவர்களின் விமர்சனத்திற்குப் பதிலளித்துள்ள சோல்சியார், முன்னணி வீரர் ரேஷ்ஃபர்ட் இல்லாததால் மேன்யூவின் தாக்குதலை வலுப்படுத்த இந்த ஏற்பாடு அவசியமாகிறது என்றார்.
“கடைசியாக நடந்து முடிந்த ஆப்பிரிக்க நேஷன்ஸ் கிண்ணப் போட்டியில் ஆக அதிக கோல்களைப் போட்ட வீரராக இகாலோ திகழ்ந்தார். எனவே, மேன்யூவிற்கு அவரால் உதவ முடியும்,” என்று சோல்சியார் விளக்கினார்.
முதுகுத் தண்டு பிரச்சினையால் அணிக்குத் திரும்பாத ரேஷ்ஃபர்ட்டுடன் சேர்ந்து பால் போக்பா, ஸ்காட் மெக்டாமினே ஆகிய வீரர்களும் செல்சி உடனான ஆட்டத்தில் இடம்பெற மாட்டார்கள்.
லீக் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள செல்சிக்கும் அதைவிட ஆறு புள்ளிகள் குறைவாகப் பெற்று ஒன்பதாவது நிலையில் உள்ள மேன்யூவிற்கும் இந்த ஆட்டம் முக்கியமான ஒன்று.
மேன்யூ நிர்வாகியாக சோல்சியார் பொறுப்பேற்றதையடுத்து, செல்சியை மேன்யூ மூன்று முறை தோற்கடித்துள்ளது மேன்யூ ரசிகர்களுக்கு நற்செய்தி.
அதாவது, கடந்த பருவம் எஃப்ஏ கிண்ணப் போட்டியிலும் நடப்பு பருவத்தில் பிரிமியர் லீக் ஆட்டம், லீக் கிண்ணப் போட்டியிலும் செல்சியை மேன்யூ வென்றது. இந்நிலையில், அடுத்த பருவம் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாட மேன்யூவிற்கு மற்றொரு வெற்றி முக்கியம் என்பதை சோல்சியார் நன்கு உணர்ந்திருப்பார்.
நாளை நடைபெறும் ஆட்டத்தில் மேன்யூ தோற்றால், செல்சியைவிட அக்குழு ஒன்பது புள்ளிகள் பின்தங்கிவிடும். அதேவேளையில், மேன்யூ வென்றால், அந்த இடைவெளி மூன்று புள்ளிகளாக குறைந்துவிடும்.
எனவே, இகாலோவின் உதவியோடு வெற்றியை நோக்கி மேன்யூ படையெடுக்கும் எனலாம்.