மிர்பூர்: ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று ஒருநாள் போட்டிகளிலும் மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடுவதற்காக பங்ளாதேஷ் சென்றுள்ளது.
டேவிட் மலான் சதமடிக்க, முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இந்நிலையில், நேற்று (03-03-2023) நடந்த இரண்டாவது போட்டியில் ஜேசன் ராய் சதம் விளாச, இங்கிலாந்து அணி 132 ஓட்ட வித்தியாசத்தில் வென்று, தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில், இரண்டாவது போட்டியின்போது ‘டிஆர்எஸ்’ எனப்படும் நடுவர் தீர்ப்பு மறுஆய்வு வாய்ப்பை பங்ளாதேஷ் அணித்தலைவர் தமீம் இக்பால் கையாண்டவிதம் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது.
இங்கிலாந்து அணி முதலில் பந்தடித்தபோது 48வது ஓவரை வீசினார் தஸ்கின் அகமது. இங்கிலாந்தின் அடில் ரஷீத் மட்டையால் பந்தை முழுவதுமாகத் தடுத்தாடினார்.
ஆனால், பந்து காலில் பட்டதாக நினைத்து, ‘எல்பிடபிள்யூ’ முறையில் அவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கும்படி பங்ளாதேஷ் வீரர்கள் நடுவரிடம் முறையிட்டனர். ஆனால், நடுவர் அதனை ஏற்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, நடுவரின் தீர்ப்பை எதிர்த்து தமீம் ‘டிஆர்எஸ்’ முறையை நாடினார். ஆனால், பந்துக்கும் காலுக்கும் கிட்டத்தட்ட ஆறு அங்குல இடைவெளி இருப்பது மறுஒளிபரப்பில் தெளிவாகத் தெரிந்தது.
தமீமின் இந்த முடிவை ‘ஆக மோசமான மறுஆய்வு’ என இணையவாசிகள் சாடி வருகின்றனர்.