இந்த ஆண்டின் முழுமைத் தற்காப்பின் கருப்பொருள் 'ஒன்றிணைந்து சிங்கப்பூரை வலுவாக்குவோம்' என்பதாகும்.
பிப்ரவரி 15, 1942இல் சிங்கப்பூர் ஜப்பானியர்களிடம் வீழ்ந்தது. அதனால் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15ஆம் தேதியன்று முழுமைத் தற்காப்புத் தினமாக கடைப்பிடித்து வருகிறோம்.
ராணுவம், சிவில், பொருளியல், சமூகம், மனோவியல், மின்னிலக்கம் ஆகிய ஆறு தூண்கள் மூலம் ஒவ்வொரு சிங்கப்பூரரும் ஆற்றவேண்டிய கடமை இருக்கிறது என்ற தகவலை மனதில் பதியவைக்கும் நோக்கத்துடன் 1984ல் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய தற்காப்பு ஏற்பாடே முழுமைத் தற்காப்பாகும்.
முழுமைத் தற்காப்பு பற்றி பாலர் பள்ளி மாணவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் சுமார் 500 பாலர் பள்ளிகளைச் சேர்ந்த 35,000 பாலர்களுக்கு முழுமைத் தற்காப்பு பற்றிய பாடங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன.
அதனை பாலர்கள் நன்கு புரிந்துகொள்ளும் வகையில் 'நம் நம்பிக்கை நமது சிங்கப்பூர் ஓவியம் வரைவோம்' என்று ஆறு தூண்களின் முக்கியத்துவத்தையும் குடும்ப பொறுப்புகளையும் விளக்கும் செயல் திட்டத்தின் கீழ் பாலர்கள் வரைபடங்களை உருவாக்கினார்கள்.
மடக்கக்கூடிய அட்டையில் தங்களுடைய எதிர்கால கனவுகளையும் நம்பிக்கைகளையும் படமாக சிறார்கள் வரைந்து அதை அவர்கள் தங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று காட்சிப்படுத்த ஊக்குவிக்கப்பட்டார்கள்.
அதன்மூலம் சிங்கப்பூரின் வாழ்க்கைபாணியைப் பாதுகாத்து நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் உயிரோட்டமிக்கவையாக வைத்திருப்பதில் பங்காற்ற வேண்டிய தேவையை குடும்பங்களுக்கு அந்தப் படங்கள் நினைவூட்டும்.
சாஃப்ராவுக்கும் பாலர் பருவம் மற்றும் பயிற்சி சேவைகள் சங்கம் என்ற அமைப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பாக இந்தச் செயல்திட்டம் இடம்பெறுகிறது.
"ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் முக்கிய பணி இருக்கிறது.
அவர்கள் முழுமைத் தற்காப்பின் ஆறு தூண்களுக்கும் வலுவேற்றி நாட்டின் மீள்திறனைப் பலப்படுத்த வேண்டும். வாழ்வாதாரத்தில் கொவிட்-19 ஏற்படுத்தி இருக்கும் பாதிப்புகளைக் களையவேண்டும்," என்று மூத்த தற்காப்பு துணை அமைச்சரும் சாஃப்ராவின் தலைவருமான ஸாக்கி முகம்மது கூறினார்.