சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசின் செயல்பாட்டை விமர்சனம் செய்வதைத் தவிர்த்து களத்தில் பணிபுரிவோரை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
“நோயை வைத்து யாரும் அரசியல் செய்யக் கூடாது. அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் தங்களது கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும். இறப்பு விகிதத்தை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. வெளிப்படைத் தன்மையோடுதான் அரசு செயல்பட்டு வருகிறது,” என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ நலமுடன் இருப்பதாக குறிப்பிட்ட அவர், எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.