சாத்தான்குளத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் திரு ஜெயராஜ், அவரது மகன் திரு பென்னிக்ஸ் விசாரணைக் காவலில் மரணமடைந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், காவல் ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், ஸ்ரீதர் காவலர்கள் முருகன் ஆகியோரை சிபிசிஐடி போலிசார் கைது செய்தனர். காவலர் முத்துராஜை கைது செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று பல்வேறு குழுக்களாகச் சென்று விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள், திரு ஜெயராஜ், திரு பென்னிக்ஸ் ஆகியோரது மரணங்களைக் கொலைவழக்காகப் பதிவு செய்தனர்.
போலீசார் 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய ஐந்தாவது நபரான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கங்கைகொண்டான் செல்லும் வழியில் சிபிசிஐடி போலீசார் வழிமறித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து ஆய்வாளர் ஸ்ரீதரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
கைதானவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
காவலர் ரேவதியை தொடர்ந்து சிறப்பு காவல் ஆய்வாளர் பால்துரை, முத்துராஜ் ஆகியோர் ‘அப்ரூவரா’க சாட்சியம் அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கின் தொடர்பில் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணையின்போது நீதிபதிகள், தந்தை மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஊதியத்துடன் அவருக்கு விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.