இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை வெளியானபோதே எதிர்ப்புத் தெரிவித்தது தமிழக அரசு.
புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்றும் இருமொழிக் கொள்கையே தொடரும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று அறிக்கையில் குறிப்பிட்ட திரு பழனிசாமி, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, புதிய கல்விக் கொள்கை பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தன்னுடைய டுவிட்டர் பதிவில், “தேசம் வெல்ல தேசிய கல்விக்கொள்கை,” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதனைச் சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமது டுவிட்டர் பக்கத்தில், “பொன்.ராதாகிருஷ்ணன்ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்த ஒரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்,” என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.
புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகம் மட்டுமின்றி மேற்கு வங்கம் உட்பட வேறு சில மாநிலங்களும் எதிர்ப்புக்குரல் கொடுத்து வருகின்றன.