தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொவிட்-19 நோய்க்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பரவலாகப் புகார் எழுந்துள்ளது.
ஏழு நாள்கள் சிகிச்சையளிக்க சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக பொதுமக்களை மேற்கோள் காட்டி தமிழக ஊடகம் பரபரப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவ மனைகளில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் நோயாளிகளுக்கு சிற்றுண்டி, கபசுரக் குடிநீர், வைட்டமின் மாத்திரைகள், சுண்டல், பாசிப்பருப்பு என தினமும் சத்தான உணவு வகைகள் அளிக்கப்படுகின்றன.
ஆனால், இதற்கு நேர்மாறாக தனியார் மருத்துவமனைகளில் ஏழு நாள்கள் சிகிச்சை அளிப்பதற்கே 3.5 லட்சம் முதல் நான்கு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
மேலும் நோயாளிகளின் குடும்பத்தார் செலுத்தும் முழுத் தொகைக்கும் ரசீது தரப்படுவதில்லை.
அதிகபட்சமாக சுமார் 60 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே ரசீது வழங்கும் தனியார் மருத்துவமனைகள் தினந்தோறும் குறைந்தபட்சமாக 50 முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் என்று நிர்ணயித்து, அதையும் சிகிச்சைக்கு அனுமதிக்கும் போதே மொத்தமாகப் பெற்றுவிட வசூல் வேட்டை நடத்துவதாகத் தெரிகிறது.
இந்நிலையில் தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான விதிமுறைகளை அரசு வகுத்துள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அரசு உத்தரவை மீறிக் கூடுதல் கட்டணம் வசூலித்த சில தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு அண்மையில் கடும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.