ராணிப்பேட்டை: ஆற்காட்டில் திருட வந்த வீட்டில் நகை, பணம் இல்லாததால் ஏமாற்றமடைந்த திருடர்கள் அந்த வீட்டில் இருந்த சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு, இந்தச் சாப்பாடும் போதாமல் தோசையையும் சுட்டுச் சாப்பிட்டுவிட்டுச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
சம்பவம் குறித்து ஆற்காடு டவுன் காவல்நிலையப் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அபிராமி நகரில் வசித்து வரும் வினோத்குமார் என்பவர், ஒரு பார்சல் சேவை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை இவர் தனது மனைவி ரேவதி, கைக்குழந்தை யுடன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் சென்றுவிட்டு மாலையில்தான் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறிக்கிடந்தன. திருட வந்த இடத்தில் நகை, பணம் இல்லாததால் ஏமாற்றமடைந்த திருடர்கள் சமையலறைக்குச் சென்று அங்கு சமைத்து வைத்திருந்த சாப்பாட்டைச் சாப்பிட்டுள்ளனர். சாப்பாடு குறைவாக இருந்ததால், அங்கிருந்த மாவை எடுத்து அதில் தோசை வார்த்து சாப்பிட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.