மதுரையிலிருந்து விராலிமலைக்கு காரில் சென்று கொண்டிருந்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சாலையில் அடிபட்டுக் கிடந்த பசுவைக் காப்பாற்ற முடியாததால் சோகமடைந்தார்.
விராலிமலை அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதியதால் பசு ஒன்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.
அந்த பசு கர்ப்பமாகவும் இருந்தது. காரிலிருந்து இறங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர், மாட்டின் காலில் அடிப்பட்ட இடத்தில் முதலுதவிகளை செய்தார்.
ஆனால் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோதே மாட்டின் உயிர் பிரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் சோகத்தில் மூழ்கினார்.
பசு உயிரிழந்ததால் அழுதுகொண்டிருந்த அதன் உரிமையாளருக்கு அமைச்சர் ஆறுதல் கூறியதோடு அரசு சார்பில் இழப்பீட்டுத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.
பசு மாட்டின் மீது வாகனத்தை மோதியவர்கள் நிறுத்தாமல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
அமைச்சர் விஜயபாஸ்கர் இதற்கு முன்பு திருச்சி விமான நிலையத்துக்கு அருகே சாலையில் ரத்தம் கொட்டிய நிலையில் விழுந்துகிடந்த மேரி எனும் பெண்ணுக்கு முதலுதவிகளை செய்து மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
மற்றொரு சம்பவத்தில் சென்னையில் விபத்தில் அடிபட்டு கிடந்த ஒருவரை தனது காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் ஆட்டோவில் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்துள்ளார்.