தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தல் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் மாற்றங்களுடன் நடக்குமெனத் தெரிகிறது.
மாநில கட்சிகளும் தேசிய கட்சிகளும் பல்வேறு விதமான வியூகங்களை வகுத்து வருகின்றன. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சி தேர்தலில் களம் இறங்க இருக்கிறது.
திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் நேற்றுகூட தன்னுடைய அரசியல் முடிவு பற்றி திட்டவட்டமாக எதையும் அறிவிக்கவில்லை என்றாலும் தேர்தல் நெருங்க நெருங்க அவர், உறுதியான முடிவு எதையாவது எடுக்கக்கூடும் என்று தெரிகிறது.
மாநிலத்தின் மிக முக்கிய அரசியல் கட்சியாகத் திகழும் திமுகவை எப்படியாவது வீழ்த்திவிட்டால் தனக்கு நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமான செல்வாக்கு அந்த மாநிலத்தில் கூடிவிடும் என்று மத்திய ஆளும் கட்சி பாஜக திட்டமிடுகிறது.
அதேவேளையில், இது நாள் வரை திமுகவுடன் சேர்ந்து தேர்தலைச் சந்தித்து வந்துள்ள காங்கிரஸ் கட்சி தன்னுடைய வியூகத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை வரலாம் என்று கவனிப்பாளர்கள் கருதுகிறார்கள்.
தொகுதி பேரம் பேசுவது, ராஜீவ் காந்தி கொலையாளிகளின் விடுதலைக்கு எதிர்ப்பு போன்ற பிரச்சினைகள் காரணமாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை காங்கிரசுக்கு ஏற்படலாம் என்று அவர்கள் கணிக்கிறார்கள்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடத்தை ஒதுக்கி கொடுத்து அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் அதிமுக போன்ற எதிர்க்கட்சியிடம் தேல்வி அடைந்தால் அது தன்னுடைய ஆட்சி அமைவதற்குப் பெரிய தடையாகிவிடும் என்று திமுக கருதுகிறது.
இதை எல்லாம் உணர்ந்துகொண்டு இருக்கும் காங்கிரஸ் கட்சி ரகசியமாக காய்களை நகர்த்தத் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
கமல்ஹாசனின் மநீம கட்சி, டிடிவி தினகரனின் அமமுக ஆகிய கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது அணியை அமைப்பது பற்றி காங்கிரஸ் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சியினர் உறுதியாகக் கூறுகிறார்கள்.
முதல் கட்டமாக, கமலிடம் நடத்திய பேச்சுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதால் காங்கிரசார் ஊக்கமடைந்துள்ளனர். சசிகலா விடுதலைக்குப் பின் அதிமுகவில் வெளியேற்றம் நடக்கலாம் என காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.