ராமதாசுக்கு ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாசுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
"இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசியல் உரிமைகளுக்காகப் போராடியும் வாதாடியும் வரும் அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று டுவிட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்தார்.
"மேலும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாசை தொலைபேசியில் தொடர்புகொண்டும் முதல்வர் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்," என்று நேற்று வெளியிட்ட தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
55% சொத்து அதிகம்;
அமைச்சர் மீது வழக்கு
சென்னை: அதிமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலிசார் சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று புதிய தலைமுறை ஊடகம் தெரிவித்தது.
வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2016 தேர்தல் வேட்புமனுவில் ரூ.2.51 கோடி சொத்து இருந்ததாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.8.62 கோடியாக அதி கரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி சகோதரர் சேகர் ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ளது.
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை
அடுத்து ஸ்டீஃபனும் கைது
சென்னை: இந்து மத நம்பிக்கை குறித்து இழிவாக பேசிய குற்றச்சாட்டில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டதையடுத்து அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீஃபனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில் ஜார்ஜ் பொன்னையா என்ற பாதிரியார், இந்து மத நம்பிக்கைகளை கேலி செய்ததுடன் அமைச்சர்கள் சேகர்பாபு, செஞ்சி மஸ்தான், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மதங்களுக்கிடையே விரோதத்தை உருவாக்குதல், மத நம்பிக்கைகளை அவதூறாக பேசுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதற்கிடையே நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த முதல் குற்றவாளியான ஸ்டீஃபனை தமிழக கேரள எல்லையான மாங்கோடு பகுதியில் வைத்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.