சென்னை: தமிழ்நாட்டில் சென்ற மாதப் பிற்பகுதியில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை இதுவரை வழக்கத்தைவிட 54 விழுக்காடு அதிகமாக பெய்து இருக்கிறது.
வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழகத்தில் சராசரியாக 26 செ.மீ. மழை பெய்யும். ஆனால் இதுவரை இந்த ஆண்டு 40 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
சென்னையில் 77 விழுக்காடு அதிகமாக மழை பெய்து இருக்கிறது. மாநிலம் முழுவதும் ஏறக்குறைய எல்லா நீர்நிலைகளும் கொள்ளளவை எட்டிவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
ஆறுகள் வழிந்து ஓடுகின்றன. பல நீர்நிலைகளும் திறக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டு இருப்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கை சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
போக்குவரத்தும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இந்நிலையில், மழை தொடரும் என்று வானிலை ஆய்வு நிலையம் அறிவித்து இருப்பதால் அதிகாரிகள் முழுமூச்சாக ஆயத்தப் பணிகளில் இறங்கி இருக்கிறார்கள்.
அதேவேளையில், அவர்கள் நிவாரணப் பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
ஏற்கெனவே கொரோனாவை ஒழிக்க பாடுபடும் நிர்வாகம், மழை காரணமாக தொற்றுநோய்கள் ஏற்படுவதை தடுக்கவும் முயற்சிகளை முடுக்கிவிட்டு உள்ளதாக அரசு தகவல்கள் தெரிவித்துள்ளன.