சென்னை: கடந்த சில தினங்களாகப் பெய்துவந்த கனமழை ஓய்ந்துள்ளதை அடுத்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் தேங்கி நின்ற மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளது.
778 இடங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது.
கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. கனமழையால் சென்னைவாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மக்கள் வீடுகளில் முடங்கினர்.
மேலும், சென்னையில் மட்டும் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை 579 மரங்கள் வேரோடு சாய்ந்தன. மழை நீர் தேங்கியதாலும் மரங்கள் சாய்ந்ததாலும் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இயல்பு நிலையை ஏற்படுத்த களமிறங்கினர்.
முதற்கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 778 பகுதிகளில் 750 இடங்களில் தேங்கிய மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டது. குறிப்பாக நகரில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் இருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டதால் போக்குவரத்து இயல்புநிலைக்கு திரும்பியது. மேலும், மழையால் கீழே விழுந்த மரங்களும் கையோடு அகற்றப்பட்டன. ஒருசில இடங்களில் மட்டும் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி நீடித்து வருகிறது. மிக விரைவில் அந்தப் பணி முடிவடையும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.