விழுப்புரம்: விழுப்புரத்தில் சாலை யோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டியில் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவனின் சடலம் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருவதாக புதிய தலைமுறை வெளியிட்ட தகவல் தெரிவித்தது.
விழுப்புரத்தில் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேல்தெரு என்ற இடத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சலவைத் தொழில் செய்துவரும் சிவகுரு என்பவர் தனது தள்ளுவண்டியை வழக்கம்போல சாலையோரம் நிறுத்தி வைத்து இருந்தார். நேற்று காலை திரும்பி வந்த அவர், தள்ளுவண்டியில் ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது என நினைத்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். அப்போது அந்தச் சிறுவனைத் தட்டி எழுப்ப சிலர் முயற்சி செய்தனர். ஆனால், சிறுவன் அசைவின்றிக் கிடந்ததால் அதிர்ச்சியடைந்து, விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த காவல்துறையினர், ஆண் குழந்தை இறந்து கிடந்ததைக் கண்டனர். குழந்தையின் உடலில் எந்த காயமும் இல்லை.
இதையடுத்து காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவத்தை தீவிரமாக விசாரித்து வரும் காவல்துறையினர் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.