மதுரை: பொறியியல் பட்டதாரி இளையரான கோகுல்ராஜ், கடந்த 2015ஆம் ஆண்டு ெகாடூரமான முறையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழக மக்களைப் பதறவைத்த இந்த வழக்கு தொடர்பில், யுவராஜ் உள்ளிட்ட அவரது நண்பர்கள் 10 பேரை குற்றவாளிகள் என்று மதுரை வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் நேற்று தீர்ப்பளித்தார்.
மொத்த குற்றவாளிகள் 17 பேரில் விசாரணையின்போதே இருவர் இறந்துவிட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகிய ஐவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதி தீர்ப்பில் கூறினார்.
குற்றவாளிகள் 10 பேருக்கான தண்டனை விபரம் வரும் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி சம்பத்குமார் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்தவர் கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜும் நாமக்கல்லைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் நட்பாகப் பழகியுள்ளனர்.
பெண்ணுடன் திருச்செங்கோட் டில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றிருந்த கோகுல்ராஜ் கொல்லப்பட்டார்.
இவா், கடந்த 2015ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம், தொட்டி பாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டு, சடலமாக மீட்கப்பட்டார்.
விசாரணையில், காதல் விவ காரத்தில் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜுக்கும் அவரது கூட்டாளிகள் உள்பட 17 பேருக்கும் இக்கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
முதலில் இந்த வழக்கினை நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், கோகுல்ராஜின் தாய் சித்ரா தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
இவ்வழக்குத் தொடர்பில் 106 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு, 500 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
முன்னதாக, கோகுல்ராஜ் வழக்கை விசாரித்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா தனது உயிரை மாய்த்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
"இப்போது வந்துள்ள தீர்ப்பு நல்ல தீர்ப்பு. குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். என் கணவர் இல்லாமல், நான் சிரமப்பட்டு பிள்ளையை வளர்த்து, என் பிள்ளையும் இறந்து நான் அனுபவித்த கொடுமை அதிகம். எந்த பெற்ற தாய்க்கும் இந்தக் கொடுமை வரக்கூடாது. இந்த தீர்ப்புக்காகத்தான் நான் உயிரோடு இருந்தேன்," என்று புதிய தலைமுறை ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கோகுல்ராஜின் தாய் சித்ரா கூறியுள்ளார்.