சனிக்கிழமை ஒரு சாமானியர்
கலப்படமே காலம் என்றாகிவிட்ட சூழலில் இளநீரையும் பதநீரையும் குறைந்த விலைக்கு விற்று மனிதர்களின் உடல்நலனைக் காக்கும் நாங்கள் சாலை ஓர மருத்துவர்கள் என்று இவர்கள் சொல்கிறார்கள்...
தென்னை வைத்தவர் தின்றுவிட்டு போவார்; பனை வைத்தவர் பார்த்துவிட்டு போவார் என்று தமிழ்நாட்டில் வழக்குமொழி உண்டு. அதாவது தென்னங்கன்று நட்டவர் வாழும் காலத்திலேயே அது காய்த்து பலன் தந்துவிடும்.
ஆனால் பனங்கன்று நட்டால் அது வளர்ந்து காய்த்து பலன் தருவ தற்குள் ஒருவரின் ஆயுள் முடிந்து விடும். அந்த அளவுக்கு தென்னை, பனை இரண்டும் நிதானமாக வளர்ந்து பலன் தருபவை.
கிளைகள் இல்லாமல் வளரும் தாவர இனத்தைச் சேர்ந்த தென்னை, பனை இரண்டும் மனித இனத்திற்கு அளவிட முடியாத அளவுக்கு நன்மை பயப்பவை என்று சொல்கிறார்கள் சந்திரகாசு, 60, சண்முகவேலு, 41 என்ற சாலை முக்கூட்டு வியாபாரிகள்.
இந்த இருவருமே சாலை ஓரமாகக் காலம்தள்ளும் சாமானியர்கள். இவர்களில் திருக்கடவூர் அருகே உள்ள மணிக்கிராமம் என்ற கிராமத்தைச் சேர்ந்த, கடந்த 35 ஆண்டுகளாக இளநீர் வியாபாரத் தில் ஈடுபட்டுவருகின்ற திரு சந்திரகாசு என்பவர் ஒருவர்.
அதற்கு முன், கள் இறக்கும் தொழிலில் நான் ஈடுபட்டு வந்தேன். ஒரு நாளில் பனை, தென்னை என 20 மரங்கள் ஏறி இறங்குவேன்.
கள் இறக்க தமிழக அரசு தடை விதித்ததை அடுத்து சட்டவிரோத மாக மாமூல் கட்டி கள் இறக்கி பணம் சம்பாதித்தேன்.
அதற்கும் ஆபத்துவர இளநீர்தொழிலில் ஈடுபட்டேன். நானே மரம் ஏறி இளநீர் பறித்தேன். பிரபலமான இந்து ஆலயம் அமைந்துள்ள திருவெண்காடு என்ற ஊரில் கோயிலுக்குள் இளநீர் வியாபாரம் செய்தேன். ஆனால் இடத்துக்கு அதிக வாடகை கேட்டதால் அதைக் காலி செய்துவிட்டு இந்த முக்கூட்டுக்கு வந்துவிட்டேன்.
தரங்கம்பாடியில் இருந்து திருக்கடவூர் செல்லும் சாலையில் இருக்கும் இந்த முக்கூட்டில் இந்த மரத்திற்குக்கீழ்தான் பல ஆண்டுகளாக என் தொழில் நடக்கிறது.
காலையில் எழுந்ததும் இளநீர் வாங்க புறப்படுவேன். நாள் ஒன்றுக்கு 100 இளநீர் வாங்குவேன்.
ஒன்று ரூ.8 வீதம் 800 ரூபாய் வேண்டும். எனக்கு வயதாகிவிட்டதால் இப்போது நான் மரம் ஏறுவதில்லை. மரங்களில் ஏறி 100 இளநீர் பறித்துப்போட்டால் ரூ.500 கூலி கொடுக்க வேண்டும். மொத்தம் ரூ.1,300 செலவாகும். இரு சக்கரவாகனத்திற்கு ரூ.150 பெட்ரோல் போட வேண்டும்.
காலை சுமார் 11 மணிக்கு இங்கு வருவேன். சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 இளநீர் விற்கும். மாலையில்தான் வீடு திரும்புவேன். வீட்டிற்குப் போய்தான் சாப்பாடு. வழியில் இரு முறை தேநீர் அவ்வளவுதான்.
இதுதான் என் வாழ்க்கை என்று சொல்லி நிறுத்தினார் சந்திரகாசு.
வேறு வருவாய் இல்லை என்றார் ஆறு பிள்ளைகளுக்குத் தந்தையான இந்த ஆடவர். நீரோட்டம் உள்ள ஒரு தென்னை மரத்தில் 20 நாட்களுக்கு ஒரு முறை இளநீர் பறிக்கலாம். ஒரு குலையில் 60 இளநீர்வரைகூட இருக்கும். நான்கே நான்குகூட இருப்பதும் உண்டு.
வழக்கமான தென்னை மரங்கள் தலைமுறை தலைமுறையாகக் காய்க்கும். இப்போது வரும் கலப்பு தென்னை இனங்கள் 15 ஆண்டு கள்தான் காய்க்கின்றன.
கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டபோது தென்னை, பனை மரங்களில் நானே ஏறி கலையங்களைக் கட்டி கள் இறக்குவேன். பெண் பனை மரத்தில் ஏழு, எட்டு கலையங்கள்கூட கட்டலாம்.
காலையில் 20 லிட்டர் அளவுகூட கள் வடியும். மாலையில் 15 லிட்டர் வடியும். ஆண் பனை மரத்தில் குறைவாகவே கள் வடியும். தென்னங்கள் உடலுக்கு அசுர தெம்பு. ராஜபோதை தரும். பனங்கள் வாயு அதிகம். இருந்தாலும் இரண்டுமே இயற்கை மருந்து என்று திரு சந்திரகாசு தெரிவித்தார்.
இளநீர் வியாபாரி இப்படி தெரி வித்த வேளையில், குறுக்கிட்ட சண்முகவேலு, என்னைப் பார்த்து, 'ஐயா பதநீர் குடித்துப் பாருங்கள்,' என்றார்.
திரு சண்முகவேலு அதே சாலை முக்கூட்டில் அதே மர நிழலில் இளநீர் வாகனத்திற்கு அருகே தன் சைக்கிளை நிறுத்தி பதநீர் வியாபாரம் செய்து வருகிறார்.
கோடை வெப்பம் தொடங்கி விட்டது. இந்த ஆண்டு வெய்யில் அதிகம் என்று முன்னுரைத்து இருக்கிறார்கள். குளுகுளு காரில் கூட போக முடியவில்லை. இங்கு யார் வந்தாலும் இளநீர், பதநீர் குடித்து உடல் வெப்பத்தைத் தணித்து விட்டு போகலாம். இது உறுதி என்றார், சண்முகவேலு.
தமிழ்நாட்டில் கள், பதநீர் இறக்க தடை உள்ளது. ஆகையால் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள பிரஞ்சு எல்லைக்குட்பட்ட காரைக் கால் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருந்து அன்றாடம் சுமார் 5 முதல் 10 லிட்டர் பதநீர் வாங்கி வருவேன்.
லிட்டர் 50 ருபாய்க்கு வாங்கி ரூ.100 க்கு விற்பேன். பதநீர் பற்றி தெரிந்தவர்கள் விரும்பி வாங்கிக் குடிப்பார்கள்.
தென்னை, பனை மரங்களில் கலையத்தைக் கட்டி கள் இறக்கும்போது கலையத்திற்குள் சுண்ணாம்பு பூசிவிட்டால் வடியும் நீர் காற்றில் வினை புரிந்து கள்ளாக மாறாது. பதிலாக அது பதநீராகிவிடும். போதை இருக்காது.
பதநீரில் சுண்ணாம்பு சத்து அதிகம் எலும்புக்கு நல்லது. புற்றுநோய்க்கு எதிரான சிறந்த மருந்து. உடலுக்கு குளுமையானது என்று சண்முகவேலு விளக்கினார்.
இளநீர் குடித்தால் உடல் தோள் மினுமினுப்பு கூடும். உடல்வெப்பம் குறையும். தாதுப் பெருள்கள் உண்டு. இவற்றோடு மருத்துவக்குணங்களும் தேவை எனில் பதநீர்தான் கைகண்ட வைத்தியம் என்றார் திரு சண்முகவேலு.
என்னுடைய உறவினர் காரைக்கால் அருகே கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதால் எனக்கு அன்றாடம் பிரச்சினை இல்லாமல் பதநீர் வந்துவிடும் என்று அவர் மேலும் கூறினார்.
பதநீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் பருகலாம். ஒரு கோப்பை ரூ.20க்கு விற்கிறேன். இளநீரும் ரூ.25 முதல் ரூ.30க்கு இங்கேயே கிடைக்கும் என்று இவர் பெருமை யாகத் தெரிவித்தார்.
இப்படித்தான் எங்கள் வாழ்க்கை ஓடுகிறது என்று சண்முகவேலுவும் சந்திரகாசனும் சேர்ந்து கூறியது, அப்போது இளநீர், பதநீர் குடித்துக் கொண்டு இருந்த பலரின் காதிலும் விழுந்து இருக்கும்.
இந்த நவீன காலத்தில் இளைஞர்கள், படித்தவர்கள் எல்லாரும் போத்தல் குளிர்பானத்தை, திடீர் உணவுகளை அதிகம் விரும்புகிறார்கள். அதற்காக அதிகமாக செலவிடுகிறார்கள். அத்தகைய உணவைப் பயன்படுத்துவால் பாதிப்புதான் அதிகம் என்பதைத் தெரிந்தும் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்.
ஆனால் நாங்கள் அப்படி அல்ல. மனசாட்சியுடன் தொழில் செய்கிறோம். இயற்கையிலேயே கிடைக்கின்ற, கலப்பு இல்லாத, உடல்நலனுக்கு ஏற்ற, சத்துள்ள பானத்தை கட்டுப்படியாகக் கூடிய விலையில் மக்களுக்குக் கொடுக்கிறோம்.
இதன் மூலம் எங்களுக்கு வருமானம் கிடைக்கிறோ இல்லையோ மருத்துவர்போல் செயல்படுகிறோம் என்ற மனநிறைவு கிடைக்கிறது என இந்த இருவரும் கூறியது மறுக்க இயலாத ஒன்றாகத்தான் தெரிகிறது.