சென்னை: சென்னையின் மிக நீளமான மேடவாக்கம் மறைமலை அடிகள் மேம்பாலத்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைத்தார்.
அதன்பிறகு புதிய பாலத்தின் மீது நடந்து ஆய்வு மேற்கொண்டார்.
தாம்பரம்-வேளச்சேரி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தப் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
வேளச்சேரி-தாம்பரத்துக்கு இடையே 2.03 கிலோ மீட்டர் நீளத்தில் பாலம் கட்டப்பட்டு உள்ளது.
இதனால், வேளச்சேரி, சோளிங்கநல்லூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யமுடியும் என கூறப்படுகிறது.
ரூ.95.3 கோடி செலவில், 1.30 லட்சம் பயணிகளுக்குப் பயன் அளிக்கும் வகையில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் அமைக்கப்பட்ட பாலங்களில் மிகவும் நீளமான பாலம் என்ற சிறப்பையும் இப்பாலம் பெற்றுள்ளது.