சென்னை: கடலூர் கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
கண்ணகியின் தந்தை துரைசாமி உள்ளிட்ட இதர ஒன்பது பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.
துரைசாமியின் உறவினர்கள் ரங்கசாமி, சின்னதுரை ஆகிய இருவரும் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.
சாதி மறுப்பு திருமணம் செய்த தால் விருத்தாசலத்தைச் சேர்ந்த கண்ணகி-முருகேசன் தம்பதியர் கடந்த 2003ல் ஆணவக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு கடலூர் சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.
இந்நிலையில், தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பத்து பேர் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், மருதுபாண்டிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 25. பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த இவர் இளங்கலைப் பொறியாளர் படிப்பு படித்தவர். இவரும் அதே பகுதியில் உள்ள வேறு பிரிவைச் சேர்ந்த துரைசாமி என்பவரது மகள் கண்ணகி, 22, காதலித்து 2003ல் கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரகசியத் திருமணம் செய்துகொண்டு, மாயமாகிவிட்டனர்.
இந்நிலையில், கண்ணகியின் உறவினர்கள் முருகேசன்-கண்ணகியைக் கண்டுபிடித்து, இருவரையும் அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களது மூக்கு, காது வழியாக விஷத்தை ஊற்றி கொலை செய்தனர். பின்னர், சடலங்களை எரித்தனர். இது ஆணவக் கொலை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வழக்கு தொடர்பில் நேற்று முன்தினம் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.