சென்னை: திராவிட மொழிக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் உள்ள தொடர்புகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தமிழக தொழில், தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற 'என்னே விந்தை இந்த ஹரப்பா நாகரிகம்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், ஹரப்பா நாகரிகம் குறித்த பல புதிர்கள் இன்றும் விடுவிக்கப்படவில்லை என்றார்.
"தென் தமிழகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு ரூ.77 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதேபோல, சங்ககால துறைமுகப் பட்டினங்கள் தொடர்பாக அகழாய்வு செய்தால், தமிழர்களின் வணிகம் தொடர்பான ஏராளமான தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது," என்றார் அமைச்சர் தென்னரசு.
இந்திய தொல்லியல் ஆய்வகத் தலைமை இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல், சிந்து சமவெளியில் அகழாய்வு செய்து நூறு ஆண்டுகளாகிவிட்டதாகக் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு முறையும் அங்கு அகழாய்வு செய்யும்போது புதிய தகவல்கள் கிடைப்பதாகவும் கூறினார். மேலும், பாதி அளவுக்குத்தான் அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது என்றும் இன்னும் ஏராளமான புதிர்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நூலாசிரியர் டி.எஸ்.சுப்பிரமணியன் பேசும்போது, ஹரப்பா நாகரிகம் தொடர்பாக 1921இல் அகழாய்வு செய்யப்பட்டது என்றும் அதன் நினைவாக இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.