சென்னை: தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு ‘ஆபத்து’ என்று பொருள். இந்தப் புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும் அதனால் கேரளா முதல் மகாராஷ்டிர மாநிலம் வரையிலான மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் மாநில அளவிலான வானிலை ஆய்வாளர்கள் முன்னுரைத்து இருந்தனர்.
இதற்கிடையே, மேற்கு-தென்மேற்கில் மையம் கொண்டுள்ள புயல் தீவிரமடைந்து வடக்கில் நகர்ந்து அதிவேகப் புயலாக வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து, நேற்று பிற்பகலில் கோவாவுக்கு 860 கி.மீ. மேற்கு-தென்மேற்கில் மையம் கொண்டிருந்தது. அபாயநிலை அதிகரித்ததை அடுத்து, அரபிக்கடலின் ஆழ்கடற்பகுதியில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப வானிலை மையம் அறிவுறுத்தியது.
அரபிக்கடலில் உருவான புயல் தீவிர புயலாக வலுவடைந்ததையொட்டி தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை நகர்ப் பகுதி முழுவதும் திங்கள், செவ்வாய் இருநாள்களும் பெய்த மழை வரும் நாள்களில் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர்ப் பகுதிகளான தேனாம்பேட்டை, மெரினா, நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, ஆழ்வார்ப்பேட்டை, அண்ணாசாலை, புரசைவாக்கம், அயனாவரம், வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளிலும் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது.