நாகர்கோவில்: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா என்ற கிருமி வேகமாகப் பரவுவதாகவும் அந்தக் கிருமிக்கு ஏற்கெனவே இரண்டு பேர் பலியாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தில் ஏழு கிராமப் பஞ்சாயத்துப் பகுதிகளில் அந்தக் கிருமி பரவி இருப்பதாகவும் அந்த இடங்களில் சில பள்ளிக்கூடங்களும் அலுவலகங்களும் மூடப்பட்டு இருப்பதாகவும் கேரள அரசாங்கம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரள-தமிழக எல்லைப் பகுதியில் செயல்படும் நான்கு சோதனைச்சாவடிகளில் கடுமையான பரிசோதனைகள் நடந்து வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்தது. இதற்கு காவல்துறையினரும் உதவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு பயணிகளிடம் பரிசோதனை நடத்தப்படுகிறது.
கார்களும் தடுத்து நிறுத்தப்பட்டு அதில் உள்ளவர்கள் சோதிக்கப்படுகிறார்கள்.
எல்லைப் பகுதிகளிலேயே மருத்துவக் குழுவினர் முகாமிட்டு இருக்கிறார்கள். அவர்கள் பயணிகளுக்கு அறிவுரை கூறி நிபா கிருமியைத் தடுத்துக் கொள்வதற்கான வழிமுறைகளைப் போதிக்கிறார்கள்.
யாருக்காவது உடலில் பாதிப்பு தெரியவந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து தங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் தொழிலாளர்களும் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
யாருக்காவது நிபா கிருமி தொற்றினால் அவர்களுக்கு கடுமையான சுவாசப் பிரச்சினை ஏற்படும்.
காய்ச்சல், தசை வலி, தலைவலி, தொண்டை புண், குமட்டல், வாந்தி, மயக்கம், சோர்வு, மனக்குழப்பம், நிமோனியா பாதிப்பு, மூளை வீக்கம் அல்லது மூளையழற்சி போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
இரண்டு நாள்களில் சுயநினைவை இழந்துவிடக் கூடிய ஆபத்தும் உண்டு என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.