சென்னை: தமிழகத்தின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்காக, தமிழக அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முன்னோடித் திட்டமான ‘நீலகிரி வரையாடு திட்டத்தை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
மேலும், பள்ளி மாணவ, மாணவியர்கள் வரையாடு பற்றிய அறிந்துகொள்ளும் வகையிலும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வரையாடு பற்றிய தகவல்களைக் கொண்ட புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு வழங்கினார்.
இது குறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தத் திட்டம் ரூ.25 கோடி செலவில், நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை, பரவல் மற்றும் சூழலியல் பற்றிய சிறந்த புரிதலை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வரையாடு’ என்று மக்களால் பரவலாக அழைக்கப்படும் ‘நீலகிரி வரையாடு’ என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் அழிந்து வரும் இனமாகும். இது புவிஈர்ப்பு விசைக்கெதிராக கடினமான குன்றின் மீது ஏறும் திறன்களுக்காக புகழ்பெற்றது. இந்த மலை ஆடுகள் ‘மவுண்டன் மோனார்க்’ என்று அழைக்கப்படுகிறது.