சிங்கப்பூரில் இன்று (மே 19) நண்பகல் நிலவரப்படி, புதிதாக 451 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,794 ஆகியுள்ளது.
புதிய சம்பவங்களில் ஒருவர் மட்டுமே சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடப்பில் இருக்கும் நிலையில், கொவிட்-19 நிலவரம் கட்டுக்குள் வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
கடந்த ஆறு நாட்களாக குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை, புதிதாக கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது. விடுதிக்கு வெளியே வசிப்போரிடையே கிருமித்தொற்று எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது.
நேற்று புதிதாக 305 பேருக்கு மட்டுமே கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், கருவிகளைச் சரிபார்க்கும் நடைமுறைகளால் குறைந்த எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி, விடுதிகளில் தங்கியிருக்கும் 323,000 ஊழியர்களிடையே 26,090 பேருக்கு, அதாவது 8 விழுக்காட்டுக்கும் சற்று அதிகமானோருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
விடுதிக்கு வெளியில் தங்கியிருக்கும் 664,000 வெளிநாட்டு பணியாளர்களிடையே 363 பேருக்கும் சிங்கப்பூரர், நிரந்தரவாசி, நீண்டகால தங்கும் அனுமதி அட்டை வைத்திருக்கும் 4.7 மில்லியன் பேரிடையே 1,310 பேருக்கும் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றுவரை 9,826 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கிருமித்தொற்று கண்டவர்களில் இந்த எண்ணிக்கை சுமார் 35%.
கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது. கிருமித்தொற்று கண்ட, ஆனால் வேறு காரணங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.
உலக அளவில் 4.8 மில்லியன் மக்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 318,000 பேர் உயிரிழந்தனர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online