கொவிட்-19 கிருமியுடன் தொடர்புபடுத்திக் கூறப்படும் கடுமையான நோயெதிர்ப்புக் குறைபாட்டிற்கான அறிகுறிகளுடன் குழந்தைகள் எவரேனும் வந்தால் அவர்களை உடனே கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்கும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் (என்யுஎச்) செல்லுமாறு பரிந்துரைக்கும்படி மருத்துவர்களைச் சுகாதார அமைச்சு அறிவுறுத்தி இருக்கிறது.
சுகாதார அமைச்சு அவ்விரு மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்பட்டு நிலைமையைக் கண்காணித்து வருகிறது.
“கவசாக்கி நோய் போன்ற அறிகுறிகளுடன் குழந்தைகள் எவரேனும் வந்தால் அவர்களை உடனே கேகே, என்யுஎச் மருத்துவமனைகளின் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பும்படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட குழந்தைகளிடத்தில் இந்தப் புதுவகை அழற்சி ஏற்படுகிறதா எனக் கவனமாகக் கண்காணிக்கும்படியும் மருத்துவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளோம்,” என்று அமைச்சு இன்று தெரிவித்தது.
அத்தகைய அறிகுறிகள் குழந்தைகளிடம் காணப்படுவது மிகவும் அரிது என்ற அமைச்சு, அதற்கும் கொரோனா கிருமிக்கும் இடையிலான தொடர்பு குறித்து இன்னும் தகவல் வெளியாகி வருவதாகவும் குறிப்பிட்டது.
குழந்தைகளிடம் கடுமையான நோயெதிர்ப்புக் குறைபாடு தென்படுவதாக மேற்கத்திய நாடுகளின் சுகாதார அமைப்புகள் இம்மாதம் 15ஆம் தேதி எச்சரிக்கை விடுத்தன. அதற்கும் கொரோனா கிருமிக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.