சிங்கப்பூரில் இன்று (மே 24) நண்பகல் நிலவரப்படி, புதிதாக 548 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,616 ஆகியுள்ளது.
புதிய சம்பவங்களில் மூவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் விடுதிக்கு வெளியே சிங்கப்பூரில் வசிப்போர் 11 பேர். அவர்களில் இருவர் பாலர் பள்ளி பணியாளர்கள்.
பாலர் பள்ளிகள் ஜூன் 2 முதல் திறக்கப்படவுள்ள நிலையில் பாலர் பள்ளி ஊழியர்களிடையே மேற்கொள்ளும் பரிசோதனைகளில் 99 விழுக்காடினருக்கு கிருமித்தொற்று இல்லை. இதுவரை சுமார் 15,300 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
28 கியன் டெக் ரோடு, 121 துவாஸ் வியூ வாக் என இரண்டு புதிய கிருமித்தொற்று குழுமங்களும் நேற்று கண்டறியப்பட்டன.
உள்ளூரில் சமூகத்தில் உறுதி செய்யப்படும் கிருமித்தொற்று சம்பவங்களில் தினசரி சராசரி கடந்த வாரம் 7 ஆக உயர்ந்துள்ளது; அதற்கு முந்தைய வாரத்தில் இந்த சராசரி 5 ஆக இருந்தது.
தொடர்புகள் கண்டறியப்படாத சம்பவங்களின் சராசரி கடந்த வாரத்தில் இரண்டாக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த சராசரி 1 ஆக இருந்தது.
சிங்கப்பூரில் நேற்று 927 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களையும் சேர்த்து 13,873 பேர் அதாவது கிருமித்தொற்று கண்டவர்களில் 45 விழுக்காட்டினர் குணமடைந்தனர்.
தொடர்ந்து 11 நாட்களாக குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை, புதிதாக கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online