சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய பகுதிகளிலிருந்து ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்தியா செல்வோர், ‘கொவிட்-19 தொற்று இல்லை’ என்ற பரிசோதனை முடிவை வழங்க வேண்டும் என்று இந்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை (டிசம்பர் 29) தெரிவித்துள்ளார்.
இந்தப் பகுதிகளிலிருந்து இந்தியா செல்வோர், பயணத்துக்கு முன்பு ‘ஏர் சுவிதா’ இணையத்தளத்தில் பரிசோதனை முடிவுகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டுவிட்டரில் அவர் கூறினார்.
“உலகம் முழுவதும், குறிப்பாக, மேற்கண்ட இந்த நாடுகளில் உள்ள கொவிட்-19 நிலவரத்தைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” என்று இந்திய சுகாதார அமைச்சு கூறியது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்குள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அமைச்சு சொன்னது.
சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொவிட்-19 பரிசோதனையைக் கட்டாயமாக்குவதில் அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, தைவான் ஆகிய நாடுகளுடன் இந்தியா சேர்ந்துள்ளது.
இந்தியாவில் புதிதாக 268 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை (டிசம்பர் 29) மத்திய சுகாதார அமைச்சின் தரவு தெரிவிக்கிறது. டிசம்பர் 2ஆம் தேதிக்குப் பிறகு பதிவான ஆக அதிக எண்ணிக்கை இது.