சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை (டிசம்பர் 24) அறிவித்துள்ளார்.
“சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமாகிறது.
“மேற்கண்ட இந்த நாடுகளில் புறப்பட்டு இந்திய விமான நிலையத்திற்கு வந்திறங்கியவுடன், யாருக்காவது தொற்று அறிகுறிகள் தென்பட்டாலோ கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டாலோ அவர் தனிமைப்படுத்தப்படுவார்,” என்று ஏஎன்ஐ செய்தித்தளத்திடம் டாக்டர் மாண்டவியா கூறினார்.
அதோடு, இந்த நாடுகளில் வரும் பயணிகள் ‘ஏர் சுவிதா’ படிவங்களை நிரப்பவேண்டியது கட்டாயம் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகளவில் கொவிட்-19 தொற்று அதிகரித்து வருவதைச் சுட்டிய அவர், மத்திய, மாநில அரசுகள் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தியாவுக்குள் நுழையும் அனைத்துலகப் பயணிகளில் 2 விழுக்காட்டினரிடம் விமான நிலையங்களில் குத்துமதிப்பாக கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை தொடங்கப்படும் என்று டாக்டர் மாண்டவியா வியாழக்கிழமை (டிசம்பர் 22) இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.
நிலவரம் குறித்து அப்போது விளக்கிய டாக்டர் மாண்டவியா, “உலகளவிலான கொள்ளை நோய் அபாயம் இன்னும் முற்றுப் பெறவில்லை. கொள்ளைநோய்க் கிருமி அவ்வப்போது தனது வடிவத்தை மாற்றி வருகிறது.
“புத்தாண்டு உள்ளிட்ட விழாக்காலம் நெருங்குவதால் விழிப்புடன் கண்காணிப்பில் ஈடுபடுமாறு எல்லா மாநிலங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன,” என்றார்.