வினோத் கருப்பையா
சிங்கப்பூரிலுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சட்ட சேவைகள் எளிதில் கிடைக்க வேண்டும் எனும் நோக்கில் ‘மைக்ரன்ட் ஜஸ்டிஸ் லீக்’ எனும் கிரிக்கெட் போட்டித் தொடர் நடத்தப்பட்டது.
பாடாங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப்போட்டியில் தமிழ் பிரதர்ஸ் அணி வாகை சூடியது. முதலில் பந்தடித்த எம்சிசி அணி ஐந்து ஓவர்களில் 34 ஓட்டங்களை எடுத்தது. இந்த இலக்கை 2.4 ஓவரிலேயே எட்டிச் சாதித்தது தமிழ் பிரதர்ஸ் அணி.
இறுதிப் போட்டிக்குமுன் தரப்பிற்கு தலா ஐந்து வழக்கறிஞர்களும் ஆறு வெளிநாட்டு ஊழியர்களும் இடம்பெற்ற நட்புமுறை ஆட்டம் நடந்தது.
“பாடாங் போன்ற இடத்தில் விளையாடுவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை. சிங்கப்பூர் முன்னணி வழக்கறிஞர்களுடன் விளையாடியது புது அனுபவம். கிரிக்கெட் மூலம் சில சட்டங்களைத் தெரிந்துகொண்டது கூடுதல் சிறப்பு,” என்றார் தமிழ் பிரதர்ஸ் அணித் தலைவர் முருகேசன்.
வெளிநாட்டு ஊழியர்களுடன் இணைந்து விளையாடியது புது அனுபவம் என்றும் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைக் கிரிக்கெட் மூலம் கொண்டுசேர்ப்பது மகிழ்ச்சி தருகிறது என்றும் சொன்னார் `டான் ராஜா & சியா’ நிறுவனத்தில் வழக்கறிஞராக உள்ள மோயிஸ் ஹைதர் சித்தாவாலா.
"எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோரில் வெளிநாட்டு ஊழியர்களும் அடங்குவர். மொழிப் பிரச்சினை, யாரிடம் உதவி கேட்பது போன்றவை அவர்களுக்குச் சவால்களாக உள்ளன. அதனால் கிரிக்கெட் மூலம் விழிப்புணர்வூட்ட போட்டிக்கு ஏற்பாடு செய்தோம்," என்றார் `Pro Bono SG' அமைப்பின் தலைவர் கிரிகொரி விஜயேந்திரன்.
தொடரை நடத்த மஜூருட்டி டிரஸ்ட் உதவியது என்றும் இத்தொடர் மூலம் 4,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் சட்ட சேவைகளை எப்படிப் பெறுவது என்பதைத் தெரிந்துகொண்டனர் என்றும் அவர் சொன்னார்.
வாய்ப்புகள் இருந்தால் எதிர்காலத்திலும் இதுபோன்ற விளையாட்டுத் தொடர்களைத் தொடர்ந்து நடத்த எண்ணம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"வெளிநாட்டு ஊழியர்களின் கிரிக்கெட் திறமையைக் கண்டு நான் வியந்துள்ளேன். அவர்களுக்கு இலவசமாக சட்ட ரீதியான உதவிகள் கிடைக்கும் என்பதை இத்தொடர் மூலம் பலரிடம் கொண்டு சேர்த்தது மனநிறைவு தருகிறது," என்றார் `Pro Bono SG' தொண்டூழியர் ஸ்ரீகாந்த்.