அனைத்துலக புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு பாலஸ்டியர் ரோட்டில் உள்ள சிங்கப்பூர் இந்தியர் சங்கம், சிலோன் விளையாட்டு மன்றம் ஆகியவற்றின் திடல்களில் வெளிநாட்டு ஊழியர்கள் கலந்துகொண்ட கிரிக்கெட் போட்டிகள் நேற்றுக் காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடந்தன.
தப்லா! வாரஇதழ், ஸீ என்டர்டெயின்மென்ட், வெஸ்ட்லைட் தங்குவிடுதி இணைந்து நடத்திய ‘வெஸ்ட்லைட் ஒருங்கிணைப்பு கிண்ணம்’ போட்டியில் வெளிநாட்டு ஊழியர்கள், தொழில்துறை தலைவர்கள், தேசிய விளையாட்டு வீரர்கள் 19 வயதுக்குக் கீழ் உள்ள இளையர்கள் அணிகளாகப் பிரிந்து விளையாடினர்.
பாலஸ்டியர் சூப்பர் கிங்ஸ், கன்ஸ்ட்ரக்ஷன் ஆல்ரவுண்டர்ஸ், சிஎஸ்சி ட்ரூபர்ஸ், டிபிஎஸ் ஸ்பார்க்ஸ், தமிழ் தலைவாஸ், டிரான்ஸ்வேர்ல்ட் லயன்ஸ் ஆகிய ஆறு அணிகள் மோதின.
தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. அதற்கு முதல் பரிசாக $2,500 கிடைத்தது. இரண்டாம் பரிசாக $1,500 பாலஸ்டியர் சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கிடைத்தது. மேலும் இரு அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.
விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்களுக்கு உணவு, பானங்கள் வழங்கப்பட்டன.
அதேவேளையில், சிலோன் விளையாட்டு மன்றத் திடலில் நடந்த போட்டியில் வெஸ்ட்லைட் தங்குவிடுதியைச் சார்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் 16 அணிகளாக விளையாடினர். அதில் வென்ற அணிக்கு $1,500 பரிசு கிடைத்தது.
“இதுபோன்ற போட்டிகளில் நண்பர்களுடன் பங்கு கொள்வது இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது.
“பல்வேறு தரப்புகளுடன் கலந்து விளையாடியது புது அனுபவமாக இருந்தது,” என்று தமிழ் தலைவாஸ் அணித் தலைவர் காளிமுத்து ரமேஷ், 33, கூறினார்.
திறன்மிக்கவர்களை மேலும் ஊக்குவிக்க விழைவதாக ஸீ என்டர்டெயின்மென்ட் நிர்வாக துணைத் தலைவர் திருவாட்டி பிரித்தா சிங் தெரிவித்தார்.
“பலதரப்பட்ட பின்னணியிலிருந்தும் நாடுகளிலிருந்தும் வந்த போட்டியாளர்கள் ஒன்றுகூடிய இப்போட்டி அனைவருக்குள்ளும் ஒற்றுமையை வளர்க்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது,” என்று தப்லா!, தமிழ் முரசு செய்தித்தாள்களின் ஆசிரியர் திரு ஜெ ராஜேந்திரன் கூறினார்.
சென்சுரியன் கார்ப்பரேஷன் தலைமை நிர்வாகி திரு காங் சீ மின், இப்போட்டி நடந்ததே குடியிருப்பாளர்கள், கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கிடைத்த வெற்றிதான் என்றார்.