தேசிய தின அணிவகுப்பு இவ்வாண்டு மரினா பே மிதக்கும் மேடையில் நடைபெறும். ஆனால் பார்வையாளர் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
அத்துடன் அனைவரும் கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
அணிவகுப்பில் பங்கேற்பவர்களும் அணிவகுப்பைக் காண வரும் பார்வையாளர்களும் தங்களின் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டு முடித்திருப்பது கொவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் என்று கூறினார் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்.
இந்நிலையில் அணிவகுப்பில் பங்கேற்கும் கலைஞர்கள், ஒவ்வோர் ஒத்திகைக்கு முன்னரும் ‘ஆண்டிஜன்’ விரைவு பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். ஒத்திகைகள் சிறு சிறு குழுக்களில் நடந்தேறினாலும் இக்கட்டுப்பாட்டு நடவடிக்கை பொருந்தும் என்று கூறப்பட்டது.
அதே வேளை நிகழ்ச்சிக்கு முந்திய கொவிட்-19 பரிசோதனையைப் பார்வையாளர்கள் செய்துகொள்ள வேண்டும். மண்டாய் ஹில் ராணுவ முகாமில் இருந்தவாறு டாக்டர் இங் இத்தகவல்களைத் தெரிவித்திருந்தார்.
சமூகத்தில் தொடர்புகள் கண்டறியப்படாத கொவிட்-19 சம்பவங்கள் இன்னமும் பதிவாகி வரும் நிலையில் தேசிய தின அணிவகுப்பு ஏன் கலைஞர்கள் பங்கேற்புடனும் பார்வையாளர்களுடனும் நேரடி நிகழ்வாக நடைபெறுகிறது என்று நேர்காணலின்போது டாக்டர் இங்கிடம் கேட்கப்பட்டது.
“கொவிட்-19 இங்கு வியாபித்துவிட்ட ஒரு நோயாகிவிட்டது. இந்தக் கிருமித்தொற்றுச் சூழலில் வாழப் பழகிக்கொள்வதும் இதற்கு ஒரு காரணம். அத்துடன் ஆகஸ்ட் மாதத்திற்குள் மக்கள்தொகையின் மூன்றில் இரு பங்கினர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பர் என்று நம்புகிறோம்,” என்று குறிப்பிட்டார் அவர்.
“அணிவகுப்பைப் பாதுகாப்பான முறையில் நடத்த முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். அத்துடன் கிருமித்தொற்றுடன் வாழப் பழகிக்கொள்வதற்கு இது ஏற்றதோர் நிகழ்வாகும். அதே சமயம் இதைச் சமாளித்துப் புது வழக்கநிலைக்குத் திரும்பலாம்,” என்றார்.
வழக்கமாக தேசிய தின அணிவகுப்புக்குக் கூடும் 25,000 பேருக்குப் பதில் எண்ணிக்கை மாறும் என்பதே புது வழக்கநிலைக்குத் திரும்புவதன் ஓர் எடுத்துக்காட்டு என்றார்.
பார்வையாளர் எண்ணிக்கை, அணிவகுப்பு தொடர்பான மேல்விவரங்கள் ஆகியவற்றை அணிவகுப்புக்கான ஏற்பாட்டுக் குழு இன்னும் சில நாட்களில் தெரிவிக்கும் என்று தெரிவித்தார் டாக்டர் இங்.
அணிவகுப்பு, கலைநிகழ்ச்சி ஆகியவற்றுடன் குடியிருப்பு வட்டாரங்களில் நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
“மேலும் பரந்ததொரு கண்ணோட்டத்தை தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சி நமக்கு அளிக்கும் என்று நம்புகிறேன். கடுமையான காலகட்டமாக இது இருந்து வந்துள்ளது. சிங்கப்பூரர்களின் உதவியுடன் நம்மால் இதைச் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்,” என்று கூறினார் டாக்டர் இங்.