பாதுகாப்புச் சான்றிதழ் இல்லாத தனிநபர் நடமாட்டச் சாதனங்களை 2020ஆம் ஆண்டுக்குள் பொதுப் பாதைகளிலிருந்து தடை செய்வதற்கான காலக்கெடுவை முன்கூட்டியே கொண்டுவருவது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) மறுபரிசீலனை செய்து வருகிறது. தற்போது, UL2272 சான்றிதழ் இல்லாத தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை பொது நடைபாதைகளில் பயன்படுத்தப்படலாம்.
ஆயினும், இத்தகைய சாதனங்களில் மின்னேற்றம் செய்யும்போது நடந்துள்ள அண்மை தீச்சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை மறுபரிசீலித்து வருவதாக ஆணையம் கூறியது. ஜூலை 22ஆம் தேதி பிற்பகலில், அங் மோ கியோவிலுள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் மின்-ஸ்கூட்டர் மின்னேற்றம் செய்யப்பட்டபோது அது திடீரென வெடித்துத் தீப்பிழம்பானது. அப்போது அந்த வீட்டில் இருந்த இரண்டு சிறுவர்கள் அக்கம்பக்கத்தாரின் உதவியால் தப்பித்தனர். ஆயினும், வீடு கடுமையாகச் சேதமடைந்தது.
இந்தச் சம்பவத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் ஜூலை 18ஆம் தேதி புக்கிட் பாத்தோக்கிலுள்ள ஓர் அடுக்குமாடி வீடு தீப்பற்றி எரிந்தது. அந்த வீட்டின் வரவேற்பு அறையில் மூன்று மின்-ஸ்கூட்டர்கள் மின்னேற்றம் செய்யப்பட்டபோது அவை வெடித்தன. எரிந்துகொண்டிருந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட அதன் உரிமையாளர் 40 வயது கோ கெங் சூன், சுயநினைவின்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் உயிரிழந்தார்.தனிநபர் நடமாட்டச் சாதனத்தால் மூண்ட தீயில் உயிரிழந்த முதல் நபர் திரு கோ.
தனிநபர் நடமாட்டச் சாதனம் UL2272 தரநிலைக்கு உடன்படுவதற்கு ஒரு சில சோதனைகளுக்கு உள்ளாகவேண்டும். தீ மற்றும் மின்சார அபாயங்களுக்கு எதிரான பாதுகாப்பை இந்தத் தரநிலை வெகுவாக முன்னேற்றும்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் தீச்சம்பவங்களைக் குறைப்பதற்காகவும் கடந்த செப்டம்பர் மாதம் அந்தத் தரநிலையை அறிமுகப்படுத்தியதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
“காலக்கெடுவுக்கு முன்பாகவே UL2272 தரநிலையைப் பின்பற்றும் தனிநபர் நடமாட்டச் சாதனத்தைப் பயன்படுத்தத் தொடங்குமாறு பொதுமக்களை நாங்கள் வலுவாக ஊக்குவிக்கிறோம்,” என்றது நிலப் போக்குவரத்து ஆணையம்.