ஹாங்காங்கின் அனைத்துலக விமான நிலையத்தில் பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கும் நேரத்தில் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளன. ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் கூடி தங்களது கருத்துகளைப் பரப்பும் புதிய முயற்சியாக வருகை புரியும் வெளிநாட்டினரை அணுக முயன்று வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலிசார் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. அண்மை பேரணிகள் அமைதியாகத் தொடங்கினாலும் போலிசாருக்கும் ஒருசில ஆர்ப்பாட்டக் குழுக்களுக்கும் இடையிலான கைகலப்புகள் அந்நாட்டின் பதற்றநிலையை அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணி முதல் ஹாங்காங் விமான நிலையத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு தனது குடிமக்களை ஊக்குவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை யுவென் லோங்கிற்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் போலிசார் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிக்கவும்:ஹாங்காங்கில் ஜனநாயகத்தின் விலை
“அமைதியான முறையில் நடந்தேற ஆர்ப்பாட்டங்கள் திட்டமிடப்பட்டாலும் அவை எந்த முன்னறிவிப்புமின்றி வன்முறையில் முடியலாம்,” என்றது அமைச்சு.
கனடா, ஜப்பான்,தென்கொரியா உள்ளிட்ட சில நாடுகளும் சிங்கப்பூரைப்போல் பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன.