ஜனநாயக உரிமைகளுக்கான குடிமக்களின் போராட்டம் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குத் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இன்று பிற்பகல் நடைபெறவிருக்கும் அத்தகைய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னிட்டு ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அந்நகரின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சனிக்கிழமை (செப்டம்பர் 21ஆம் தேதி) இரவு ஹாங்காங்கின் விமான நிலையத்தருகே நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்கள் கைகலப்பில் முடிந்ததால் பதற்றநிலை அதிகரித்துள்ளது. சாலைத் தடுப்புகள் சில தீவைத்துக் கொளுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். அவர்களைச் சமாளிக்க கண்ணீர் புகையைப் பயன்படுத்திய போலிசார் 13 வயது சிறுவர்கள் இருவரைக் கைது செய்தனர்.
தங்களது ஜனநாயக உரிமைகளை சீனாவின் மத்திய அரசாங்கம் மதிப்பதில்லை என்பதே ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர்களின் குற்றச்சாட்டு. ஹாங்காங்கின் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டத்தின் அறிமுகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் கடந்த சில மாதங்கள் நிகழ்ந்தன. இறுதியில் அந்தச் சட்டத்திற்கான மசோதா இம்மாதம் முற்பகுதியில் மீட்கப்பட்டது. இருந்தபோதும் அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தொடர்ந்து தங்களது ஜனநாயக உரிமைகளுக்குக் குரல் கொடுக்கப்போவதாகக் கூறியுள்ளனர்.
விமான நிலையத்திற்குள் மட்டுமின்றி அதனுடன் இணையும் சாலைகளிலும் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இன்று பிற்பகலிலும் அங்கு ஆர்ப்பாட்டங்கள் தொடரவுள்ளன.
வரும் அக்டோபர் 1ஆம் தேதி, சீனாவின் குடியரசு நிறுவப்பட்டு 70 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் தினம். இவ்வேளையில் ஹாங்காங்கின் ஆர்ப்பாட்டங்கள் உலகளவில் சீனாவுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.