சிங்கப்பூர் : மின்-ஸ்கூட்டர் ஓட்டுவதற்குக் குறைந்தது 16 வயதை எட்டியிருக்கவேண்டும் என்றும், பொதுப் பாதைகளில் ஓட்டுவதற்கு முன்பாக எழுத்துத்தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்கவேண்டும் என்றும் உந்து நடமாட்ட ஆலோசனைக் குழு பரிந்துரைத்திருக்கிறது.
குழு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும் அண்மை பரிந்துரைகளில் இவை உள்ளடங்குகின்றன. வேலைக்காக மின்-ஸ்கூட்டர் ஓட்டுவோருக்காக அவர்களது நிறுவனங்கள் மூன்றாம் தரப்புக்குப் பொறுப்பேற்கும் காப்புறுதி பெறுவதைக் கட்டாயமாக்கவும் குழு பரிந்துரைக்கிறது. இத்தகைய காப்புறுதி தேவைப்படுவோரில் பெரும்பாலோர் உணவு விநியோகிப்பாளர்கள்.
கடந்த சனிக்கிழமை மின்-ஸ்கூட்டருடன் மோதிய 65 வயது திருவாட்டி ஓங் பீ எங் காலமான செய்தியறிந்து தானும் குழுவின் மற்ற உறுப்பினர்களும் “ஆழ்ந்த கவலையடைந்ததாக” குழுவின் தலைவர் டாக்டர் ஃபைஷால் இப்ராஹிம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 17) ஃபேஸ்புக்கில் கருத்துரைத்தார். இக்குழுவின் அண்மை பரிந்துரைகள் போக்குவரத்து அமைச்சுக்குக் கிடைத்திருப்பதாகப் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.
“இந்தப் பரிந்துரைகளை ஆராய்ந்து, உரிய காலத்தில் பதிலளிப்போம்,” என்று அவர் எழுதியிருந்தார்.
உந்து நடமாட்ட ஆலோசனைக் குழு சூழ்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து, மின்-ஸ்கூட்டர் பயன்படுத்தும் அனைவரும் காப்புறுதி பெறுவதைக் கட்டாயமாக்குவதற்குத் தொழில்துறையையும் சமூகத்தையும் தயார்ப்படுத்தும் என டாக்டர் ஃபைஷால் தெரிவித்தார். பொதுப் பாதைகளில் கண்காணிப்பின்றி தனிநபர் நடமாட்டச் சாதனங்களை ஓட்டுவோர் குறைந்தது 16 வயதை எட்டியிருக்கவேண்டும் என்றும் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
“பதினாறு வயதுக்குக் குறைவானவர்கள் பெரியவர்களின் கண்காணிப்பின்கீழ் தொடர்ந்து ஓட்டலாம்,” என்றார் டாக்டர் ஃபைஷால்.
மின்-ஸ்கூட்டர் ஓட்டுவோர் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுவதைக் கட்டாயமாக்கவும், கைப்பேசிகள் பயன்படுத்துவதைத் தடை செய்யவும் குழு பரிந்துரைத்துள்ளது. பொதுப் பாதைகளைப் பாதுகாப்பான முறையில் பகிர்ந்துகொள்ள பாதசாரிகளுக்கான “நன்னடத்தை விதிமுறைகள்” தயாரிக்கப்படவேண்டும் என்றும் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தடை செய்யப்படவேண்டும் என அதிகமானோர் குரல்கொடுக்கத் தொடங்கியிருக்கும் இவ்வேளையில் குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தடைக்கு ஆதரவு கோரும் இணைய மனுவில் வெள்ளிக்கிழமை காலை வரை 45,000 கையெழுத்திட்டிருந்தனர். மற்ற சிலர் மேலும் அதிக கெடுபிடியான விதிமுறைகளும் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என குரல் கொடுத்துள்ளனர். வேறு சிலர், ஐரோப்பாவில் இருப்பதைப்போல வேக வரம்பு மணிக்கு ஆறு கிலோமீட்டருக்குக் குறைக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். தற்போதைய வேக வரம்பு மணிக்குப் பத்து கிலோமீட்டர்.