திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 610 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் 88 அடியில் சிக்கியிருந்த சுர்ஜித் உயிரிழந்ததாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அதிகாரபூர்வமாகத் தெரிவித்தார்.
பல்வேறு சிரமங்களுக்கிடையே 82 மணி நேரத்துக்கு நீடித்த மீட்புப் பணிகள் தோல்வியுற்று, குழந்தை சுர்ஜித்தை காப்பாற்ற இயலாமல் போனது.
ஆழ்துளைக் கிணற்றில் நேற்று இரவு 10.30 மணியளவிலிருந்து குழந்தையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், குழந்தை உயிரிழந்ததாகவும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் திரு ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
குழந்தை சுர்ஜித்தின் உடல் அதிக அளவில் சிதைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இருந்து 3 கி.மீ.தொலைவில் உள்ளே ஆவாரம்பட்டி புதூர் கிராமத்தில் உள்ள கல்லறையில் கிறிஸ்துவ சமய வழக்கப்படி இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு, குழந்தை சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நடுக்காட்டுபட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், கடந்த 25ஆம் தேதி மாலை 5.30 மணியளவில், அவர்களுக்குச் சொந்தமான இடத்தில் சரியாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க பல்வேறு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை.
மீட்கப்பட்ட அவனது உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தாமதமேதுமின்றி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் தொடர்பான விவரம் ஏதும் வெளியிடவில்லை.
குழந்தை உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டவுடன் அவனுடைய உடலை வைப்பதற்கான சவப்பெட்டியை மாவட்ட நிர்வாகமே ஏற்பாடு செய்தது.
சிலுவை வரையப்பட்ட சவப்பெட்டி தயார் செய்யப்பட்டு அது உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து சவப்பெட்டி இறக்கப்பட்டு அதில் சுர்ஜித் உடல் வைக்கப்பட்டதும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர்கள் கண்கலங்கினர்.
அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் மணப்பாறை அரசு மருத்துவமனைக்குச் சென்று சுர்ஜித்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் உடலை அவனது சொந்த ஊரான நடுக்காட்டுபட்டிக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
நல்லடக்கத்துக்காக சுர்ஜித்தின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் நடுக்காட்டுப்பட்டியில் உள்ள பாத்திமாபுதூர் கல்லறை தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ஆம்புலன்ஸ் செல்லும் வழி நெடுகிலும் மக்கள் காத்திருந்து குழந்தை சுர்ஜித்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவனது சொந்த ஊரிலும் ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
குழந்தை சுர்ஜித்தின் மரணச் செய்தி அவனது அண்ணன் மாதேஷை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. கண்ணீர் வற்றிய நிலையில் கதறும் அவனது தாயின் வேதனை காண்போரை உலுக்குவதாக உள்ளது.
கேட்போரை மனம் பதைபதைக்க வைக்கும் குழந்தை சுர்ஜித்தின் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல பகுதிகளிலும் வசிக்கும் தமிழர்களும் மற்றவர்களும் சிறுவன் சுர்ஜித் உயிரோடு மீட்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், சமூகத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சுர்ஜித் உயிரோடு மீட்கப்பட வேண்டும் என்று சொல்லி மீட்புப் பணியினருக்கு ஊக்கமூட்டி வந்தனர்.
பெற்றோர், உறவினர்கள் மட்டுமின்றி செய்தியறிந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு விடைபெற்றுக்கொண்டான் சுஜித்.