லக்கி பிளாசா கடைத்தொகுதிக்கு வெளியே நேற்று நடந்த கார் விபத்தில், அடிபட்ட பெண்ணின் மீது இருந்த காரைத் தூக்க உதவிய ஆறு பேரில் 28 வயது திரு ஈஸ்வரன் சுவாமியும் ஒருவர்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொழில்நுட்பராகப் பணியாற்றி வரும் திரு ஈஸ்வரன், பாதுகாப்பு அதிகாரிகளாகப் பணிபுரியும் அவரின் நண்பர்களைச் சந்திக்க வந்திருந்தார்.
பிற்பகல் கிட்டத்தட்ட 4.15 மணி அளவில் பெரும் சத்தம் கேட்டு விரைந்த அவர், அங்கு நடந்ததைக் கண்டு திகைத்துப் போனார். விபத்துக்குள்ளான காரின் அடியில் சிக்கியிருந்த பெண்ணைப் பார்த்து அவர் உடனே உதவ முன்வந்தார்.
“இன்னொரு மனிதரைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. பலரும் திறன்பேசிகளின் மூலம் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். என்னால் அப்படி இருக்க முடியவில்லை,” என்று கூறினார் திரு ஈஸ்வரன்.
திரு ஈஸ்வரனையும் சேர்த்து ஆறு பேர் காரைத் தூக்கும் சமயத்தில் இருவர் சிக்கியிருந்த பெண்ணை மீட்டனர்.
“கார் மிகவும் கனமாக இருந்தது. மொத்த எடையும் பெண்ணின் மீது இருந்ததில் அவரால் எதுவும் பேசக்கூட முடியவில்லை. வாயிலிருந்து இரத்தம் கசிந்தது. கண்கள் மட்டும் திறந்திருந்தன. சில அதிகாரிகளும் காரைத் தூக்க உதவினர்.
“என்னால் முடிந்த உதவியை செய்தேன். அங்கே பலர் அடிபட்டிருந்தனர். அவர்களில் ஒருவரைக் காப்பாற்ற முடிந்தால்கூட அது பெரிய விஷயம்,” என்றார் திரு ஈஸ்வரன்.
விபத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் 64 வயது ஆடவர். கறுப்பு நிற ஹோண்டா கார் வளைவதற்காக முயற்சி செய்தபோது வேலியை உடைத்துக்கொண்டு சென்றார்.
பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த அறுவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் 41, 50 ஆகிய வயதுடைய இரு மாதுகள் உயிரிழந்துள்ளனர். மற்ற நால்வருக்குக் கடுமையான காயங்களும் ஏற்பட்டுள்ளன.
இறந்தவரில் ஒருவரும் காயம் அடைந்த நால்வரில் ஒருவரும் சகோதரிகள் எனக் கூறப்படுகிறது.
இவ்விருவரும் சிங்கப்பூரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்கள் என்று வெளிநாட்டு இல்லப் பணியாளர்கள் நிலையத்தின் தலைவர் திரு இயோ குவாட் குவாங் தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து மாலை 4.58 மணிக்குத் போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.