பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் திறன்பேசி வழியே நேரலையில் வாழ்த்த நேற்று மனமகிழ்ச்சியோடு மணம் முடித்தனர் சத்தியமூர்த்தி நாயுடு- நிஷா குமார் தம்பதி.
உள்ளூர் தொலைக்காட்சி நாடகஉதவி இயக்குநரும் நடிகருமான 30 வயது சத்தியமூர்த்தி, தொலைக்காட்சி நடிகையான 30 வயது நிஷாவின் திருமணம் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயத்தின் சந்நிதியில் நேற்று நடைபெற்றது. காலை 10 மணி முதல் 11.30 வரை நடைபெற்ற இத்திருமணத்தை இருவரது பெற்றோர் உட்பட கிட்டத்தட்ட 2,400 பேர் நேரலையில் கண்டுகளித்தனர்.
திருமணத் தேதியைக் கடந்தாண்டு ஏப்ரலில் முடிவு செய்தபோது 200 பேருடன் எளிமையாக திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்த இத்தம்பதி, இவ்வளவு எளிமையாக மணவிழா நடைபெறும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.
கொரோனா கிருமிப் பரலவைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாடுகளால் 10 பேர் மட்டுமே திருமண நிகழ்வில் ஒரே நேரத்தில் கலந்துகொள்ள முடிந்தது.
மலேசியாவில் விதிக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாடுகளால் மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த நிஷாவின் பெற்றோர், உறவினர்களால் சிங்கப்பூருக்கு வர முடியவில்லை.
வேலை காரணமாக அண்மையில் தாய்லாந்து சென்றுவந்த சத்தியமூர்த்தியின் தாயாருக்கு வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருமணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர்தான் ஒரு நேரத்தில் பத்து பேர் மட்டுமே கோயிலுக்குள் செல்லமுடியும் என்ற விதிமுறை நடப்புக்கு வந்தது.
எனவே, சத்தியமூர்த்தியின் சின்னம்மாவும் சிற்றப்பாவும் பெற்றோர் ஸ்தானத்தில் திருமணச் சடங்குகளில் பங்கேற்றனர்.
நிஷாவுக்கு சிங்கப்பூரில் வாய்ப்பளித்த இயக்குநர் பெற்றோர் ஸ்தானத்தில் கலந்துகொண்டார்.
இவர்களுடன் தமது சகோதரர் உள்ளிட்ட சில உறவினர்களுடன் கேமரா பணியாளர்கள் ஆகியோர் சேர்ந்து மொத்தம் பத்து பேரே திருமணத்தின்போது உடன் இருந்ததாக சத்திமூர்த்தி கூறினார்.
“மேலும் நெருக்கமான 15 நண்பர்கள் ஆலயத்திற்கு வெளியில் காத்திருந்தனர். ஒவ்வொருவரும் தனித்தனியே கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு உள்ளே வந்தனர்,” என்று அவர் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டில் சந்தித்த இவ்விருவரும் 2018, நவம்பர் மாதம் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். சென்ற ஆண்டு முடிவு செய்த திருமண நாளை மாற்ற இருவரும் விரும்பவில்லை.
“திருமணத்தைத் தள்ளிவைக்காமல் குறித்த தேதியில் நடத்துவதில் எங்களது பெற்றோருக்கு மாற்றுக் கருத்து இருக்கவில்லை இருந்தபோதும் நேரில் திருமணத்தைக் காண முடியாத ஏக்கத்தைப் போக்குவதற்காக நேரலையில் ஒளிபரப்பும் யோசனையை புகைப்பட கலைஞர் கந்தன் ஜெய் முன்வைத்தார்,” என்று நிஷா கூறினார்.
“நாங்கள் இரண்டு கேமராக்களைப் பயன்படுத்தினோம். திருமணச் சடங்கு எவ்வித தடங்கலும் இல்லாமல் ஒளிபரப்பாவதை நானும் சக பணியாளர் நரேந்திரனும் உறுதி செய்தோம்,” என்றார் கந்தன்.
திருமண விழாவின் நேரலை காணொளியை தூரத்திலிருந்து கண்டு தங்கள் அன்பைப் பொழிந்த பல்லாயிரக்கணக்கானோரால் இந்நாள் மிகவும் தித்திப்பாக அமைந்ததாகக் கூறினர் மணமக்கள்.
திருமணத்தின்போது சடங்குகளில் அதிகம் கவனம் செலுத்தியதாகக் கூறிய அத்தம்பதியர், பெரும்கூட்டம் நேரில் இல்லாத குறையை அவ்வளவாக உணரவில்லை எனத் தெரிவித்தனர். தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் அனுப்பிய வாழ்த்துச் செய்திகள் நெகிழ வைத்ததாக தம்பதியர் இருவரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
#சத்தியமூர்த்தி #நிஷா #திருமணம்