அத்தியாவசியச் சேவையில் ஈடுபட்டுவந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர், கிருமிப் பரவலை முறியடிக்கும் அதிரடி நடவடிக்கைகள் தொடர்பாக விதிமீறியதற்காக அவரது வேலை அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் சிங்கப்பூரில் இனிமேல் எப்போதும் வேலை செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 9) மாலை வேலையை முடித்த அவர், இரவு உணவு உட்கொண்ட பிறகு பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்துவிட்டு நேற்றுதான் அவர் தங்குமிடத்துக்குத் திரும்பியது விசாரணையில் தெரியவந்தது.
தற்போது நடப்பில் உள்ள அதிரடி நடவடிக்கைகளின் தொடர்பிலான விதிமுறைகளை மீறிய செயல் இது என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது
லிட்டில் இந்தியா உட்பட தீவின் பல்வேறு பகுதிகளில் மனிதவள அமைச்சு, சுற்றுப்புற நீர்வள அமைச்சு, தேசிய பூங்காக்கள் கழகம் உட்பட பல்வேறு அரசாங்க முகவைகளைச் சேர்ந்த அதிகாரிகள், நேற்று முன்தினம் (ஏப்ரல் 10) முதல் இன்று வரை, கிருமிப்பரவலை முறியடிப்பதற்கான அதிரடி நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் 39 வெளிநாட்டு ஊழியர்களும் இந்த விதிமுறைகளை மீறியதாகக் குறிப்பிட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஒரே வீட்டில் வசிக்காதவர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்தல், ஃபிரிஸ்பீ மற்றும் காற்பந்து போன்ற பொழுதுபோக்கு விளையாட்டு போன்றவற்றில் அவர்கள் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கிருமிப்பரவலை முறியடிப்பதற்கான அதிரடி நடவடிக்கை விதிமுறைகளை அவர்கள் மீண்டும் மீறினால் அவர்களது வேலை அனுமதிச் சீட்டுகளை ரத்து செய்யவோ சிங்கப்பூரில் அவர்களைச் சார்ந்து இருப்போரின் அனுமதி அட்டைகளை ரத்து செய்யவோ தயக்கம் காட்டப்பட மாட்டாது என்று மனிதவள அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
கிருமிப்பரவலை முறியடிப்பதற்கான அதிரடி நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் கூட்டு பொறுப்பு உள்ளது என்று தெரிவித்த மனிதவள அமைச்சு, தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் உடல் நலனைப் பாதுகாக்க இந்த நடவடிக்கைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவது அவசியம் என்றது.
இதன் தொடர்பில் விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு எச்சரித்தது.