மருத்துவமனைகளுக்கு வெளியே உள்ள கொவிட்-19 நோயாளிகளுக்கான சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் ஜூன் மாத இறுதிக்குள் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலேசான அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கான படுக்கைகள் சமூகப் பராமரிப்பு வசதிகளில் 20,000க்கு உயர்த்தப்படும் என்று சிங்கப்பூர் ஆயுதப்படையின் கூட்டு செயலாக்கப் பிரிவின் இயக்குநரான பிரிகேடியர் ஜெனரல் டேவிட் நியோ இன்று (ஏப்ரல் 28) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
பாசிர் ரிஸ் என்டியுசி டி’ரிசோட் வளாகம், சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்குகள் 1-6, சாங்கி கண்காட்சி மையம் போன்ற இடங்களில் தற்போது 10,000 படுக்கைகள் உள்ளன.
நோயாளிகளை ஏற்றுக்கொள்ள மிக விரைவில் இந்த வசதிகள் அமைக்கப்பட்டன என்று தெரிவித்த ஜெனரல் நியோ, சிங்கப்பூர் எக்ஸ்போ ஒரு வாரத்திற்குள்ளும் சாங்கி கண்காட்சி மையம் இரண்டு வாரத்துக்குள்ளும் தயாராகின என்று கூறினார்.
நோய் தொற்றிய 14 நாட்கள் கழித்து நலமுடன் இருப்போர், கூடுதல் மருத்துவப் பராமரிப்பு தேவைப்படாதோர் ஆகியோருக்கான சமூக குணமடையும் வசதிகளும் ஜூன் மாத இறுதிக்குள் 10,000க்கும் அதிகமான படுக்கைகளாக அதிகரிக்கப்படும்.
பெரும்பாலும் சிங்கப்பூர் ஆயுதப்படை முகாம்களில் உள்ள தற்போதைய சமூக குணமடையும் வசதிகளில் 2,000 படுக்கைகளே உள்ளன என்றும் ஜெனரல் நியோ விவரித்தார். இந்த வசதிகளில் உள்ள நோயாளிகள் வீட்டுக்கோ தங்கும் விடுதிக்கோ அனுப்பப்படுவதற்கு முன் சோதிக்கப்படுவார்கள்.
மொத்தத்தில், தனிமைப்படுத்துதலுக்காகவும் பராமரிப்புக்காகவும் தற்போது 18,000 படுக்கைகள் உள்ளன என்றும் மேலும் 23,000 படுக்கைகள் அங்கு சேர்க்கப்படும் என்றும் ஜெனரல் நியோ சொன்னார்.
அதே செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சுகாதார அமைச்சின் சுகாதாரச் சேவைகளுக்கான இயக்குநர் இணைப் பேராசிரியர் கென்னத் மாக், “நோயாளியின் தேவைக்கு ஏற்ப சிகிச்சையும் அளிக்கப்படும். சோதிக்கப்படும் நோயாளிகளில் பெரும்பாலானோருக்கு இலேசான அறிகுறி மட்டுமே தென்படுவதால், அவர்களுக்கு தீவிரமான மருத்துவ பரிசோதனை தேவைப்படாது.
“அவர்களில் 30 விழுக்காட்டினருக்கு இன்னும் கூடுதலான மருத்துவ கவனிப்பு தேவைப்படுவதால், அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிப்படுக்கப்படுவார்கள்,” என்றும் தெரிவித்தார்.
நீட்டிக்கப்பட்ட சுகாதாரப் பராமரிப்பு வசதிகளுக்கு ஆதரவு திரட்டும் நோக்கத்தில் இம்மாதம் 7ஆம் தேதி தொடங்கப்பட்ட ‘எஸ்ஜி ஹெல்த்கேர் கார்ப்ஸ்’ திட்டத்தில் இணைந்துகொள்ள 3,000 சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தனியார் துறையினர், முன்னாள் மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருத்துவ தொழிலிலிருந்து ஒய்வு பெற்றவர்கள் ஆகியோர் அவர்களில் அடங்குவார்கள்.
இதில் இன்னும் அதிகமான சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும் சுகாதாரப் பராமரிப்பு துறையைச் சாராத ஊழியர்களும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் பேராசிரியர் மாக் சொன்னார்.
இன்றைய செய்தியாளர் கூட்டத்துக்குத் தலைமையேற்ற சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் இங் ஹாவ் யு, “கிருமித்தொற்றை சிறப்பாக சமாளிக்க பொதுத் துறையும் தனியார் துறையும் இணைந்து செயல்பட வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.