கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர் மீண்டும் முஸ்தஃபா சென்டர் கடைத்தொகுதி இன்று திறக்கப்பட்டது. முஸ்தஃபா கடைத்தொகுதியின் ஊழியர்களிடையே கொவிட்-19 கிருமித்தொற்று பரவியதையடுத்து அந்தக் கடைத்தொகுதி கிருமித்தொற்று குழுமமாக சுகாதார அமைச்சால் கடந்த மாம் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து முதல் கட்டமாக இரண்டு வாரங்களுக்கு அது மூடப்பட்டது. பின்னர் மேலும் இரண்டு வாரங்களுக்குக் கடை அடைப்பு தொடர்ந்தது.
சென்ற மாதம் 29ஆம் தேதியன்று திறக்கவிருந்த அந்தக் கடை, பின்னர் சில நாட்கள் கழித்து இன்று பிற்பகல் ஒரு மணியளவிலிருந்து செயல்படத் தொடங்கியது.
இருப்பினும் மளிகைப் பொருட்கள் அடங்கிய அத்தியாவசிய சாமான்கள் விற்கப்படும் பகுதிகள் மட்டுமே செயல்படத் தொடங்கியுள்ளன.
நாடு முழுவதும் நடப்பில் இருக்கும் கிருமித் தடுப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்படும்வரை முஸ்தஃபாவின் இதரப் பகுதிகள் செயல்படாது.
அறிவிப்பு வரும் முன்னரே இன்று பிற்பகல் கடை திறக்கப்பட்டதும் வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று கடைக்குள் சென்று பொருட்கள் வாங்கி வருவதைக் காண முடிந்தது.
சையத் ஆல்வி சாலை, வெர்டன் சாலைச் சந்திப்பு அருகே உள்ள மூன்றாம் நுழைவாயில் வழியாக மட்டுமே வாடிக்கையாளர்கள் உள்ளே செல்ல முடியும். ஒரு மீட்டர் இடைவெளியுடன் வாடிக்கையாளர்கள் வரிசைப் பிடித்து நிற்பது, உடல் வெப்பத்தைப் பரிசோதிப்பது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிறுவனத்தார் முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் கடைத்தொகுதிக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் கடை திறந்ததை பெருமூச்சுடன் வரவேற்றனர்.
“என்னதான் லிட்டில் இந்தியாவிலும் வேறு பகுதிகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் திறந்திருந்தாலும் முஸ்தஃபாவில் பலவகையான இந்திய மளிகை, மசாலா பொருட்கள் ஒரே இடத்தில் கிடைப்பது வசதியான ஒன்று,” என்றார் தூக்க முடியாத அளவில் பொருட்களை வாங்கிக்கொண்டு கடையிலிருந்து வெளியேறிய திரு பிரசன்னா. அடுத்த சில நாட்களுக்கு காலை 9.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை கடை திறந்திருக்கும் என்று அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
கடந்த 2003ஆம் ஆண்டு முதல் முஸ்தஃபா, 24 மணி நேரமும் செயல்பட்டு வந்த கடைத்தொகுதி ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.