சிங்கப்பூரில் உள்ள 140,000க்கும் மேற்பட்ட முதலாளிகளுக்கு வேலை ஆதரவுத் திட்ட வழங்கீடாக $4 பில்லியன் அளிக்கப்பட உள்ளது. இம்மாதம் 28ஆம் தேதி முதல் இந்த நிதி ஆதரவு வழங்கப்படும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மூன்று வரவு செலவுத் திட்டங்களில் அரசாங்கம் அறிவித்த $20 பில்லியன் கடப்பாடுகளின் ஒரு பகுதி இது என்று அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
இம்மாதம் தொடங்கவிருக்கும் வழங்கீட்டின்கீழ் ஒவ்வோர் உள்ளூர் ஊழியரின் முதல் $4,600 வரையி லான மாதச் சம்பளத்தில் 75 விழுக்காட்டை அரசாங்கம் ஏற்கும். கொரோனா கொள்ளைநோய் காலத்தில் நிறுவனங்களின் சிரமத்தைத் தணிக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த உதவியை வழங்குவதாக நிதி அமைச்சருமான திரு ஹெங் கூறியுள்ளார்.
இந்நிலையில், நிதி அமைச்சு இன்று (மே 17) மாலை வெளியிட்ட அறிக்கையில் வழங்கீட்டைப் பெற முதலாளிகள் விண்ணப்பிக்கத் தேவை இல்லை என்றும் பிப்ரவரி 14ஆம் தேதி வரையில் மத்திய சேம நிதி அலுவலகத்தில் சேர்ப்பிக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் தானாகக் கணக்கிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கிகளில் ‘பேநவ் கார்ப்பரேட்’ சேவைக்குப் பதிவு செய்துள்ள முதலாளிகள் இம்மாதம் 28ஆம் தேதியோ அதற்கு முன்னரோ நிதி வரவை எதிர்பார்க்கலாம் என்றும் மற்றவர்களுக்கு ஜூன் 3ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை காசோலை மூலம் தொகை அனுப்பப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்மாதம் வழங்கப்படவிருக்கும் தொகை கடந்த நவம்பர் மாத சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் என்றும் இனிமேல் தரப்பட இருக்கும் வேலை ஆதரவுத் திட்ட வழங்கீடுகள் இம்மாதம் வழங்கப்பட்ட சம்பளத்தைக் கணக்கில் கொண்டு சரிக்கட்டப்படும் வகையில் அமையும் என்றும் அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
முழுமையான செய்தியைப் படிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online)