1986. சிங்கப்பூர் பொருளியல் மீட்சிக்காக போராடிக்கொண்டிருந்த காலம்.
ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை (போனஸ்), ஊதிய உயர்வு போன்றவற்றைக் கொடுக்க இயலாது என்று பல நிறுவனங்கள் கூறிய காலகட்டம் அது.
ஊழியர்களின் நலனுக்காக நிறுவனத்திடம் சென்று பேசிப் பார்த்தார், அப்போது 26 வயதே ஆன திரு கார்த்திகேயன் கிருஷ்ணமூர்த்தி.
புலாவ் ஆயர் பெர்பாவ்வில் சிங்கப்பூர் பெட்ரோகெமிக்கல் கார்பரேஷனில் தொழில்நுட்பராகப் பணியாற்றி வந்தார் அவர். பொருளியல் மந்த நிலையில் இருந்தபோதும் அவரது நிறுவனம் லாபமீட்டியதை அவர் அறிந்திருந்தார்.
“ஊழியர்களுக்கு ஏன் போனஸ் இல்லை? ஏன் ஊதிய உயர்வு இல்லை?” என நிர்வாக இயக்குநரிடம் கேள்வியெழுப்பிய அந்த இளையரிடம், தொழிற்சங்கங்கள் மட்டுமே இத்தகைய கேள்விகளை எழுப்ப முடியும் என்ற பதில்தான் கிடைத்தது.
தொழிற்சங்கத்தை அமைத்தார்.
ஆம். 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் பெட்ரோகெமிக்கல் காம்ப்ளெக்ஸ் எம்ப்ளாயீ’ஸ் யூனியன் (SPCEU) எனும் தொழிற்சங்கம் உதயமானது.
தொழிற்சங்கத்தின் மூலம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பலனாக முன்னர் கொடுக்கப்பட்டிருக்க வேண்டிய ஊக்கத்தொகைகள், ஊதிய உயர்வுகள் போன்றவற்றையும் சேர்த்து ஊழியர்களுக்குப் பெற்றுத் தந்தார் திரு கார்த்திகேயன்.
பின்னர், 1988ல் முழுநேர தொழிற்சங்கத் தலைவரானார். அதன் பிறகு என்டியுசியின் துணைத் தலைவர், நியமன நாடாளுமன்ற உறுப்பினர், வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார மன்றத்துடனான ஒரு குழுவின் தலைவர் என பல பதவிகளை வகித்தார்.
இந்த ஆண்டின் மே தின விருதுகளில், தொழிற்சங்கவாதிகளுக்கு வழங்கப்படும் ஆக உயரிய விருதான ‘தொழிலாளர் தோழர்’ எனப்படும் Comrade of Labour (Star) (Bar), விருது நேற்று (மே 22) அவருக்கு வழங்கப்பட்டது.
இவ்வாண்டு விருது பெறும் ஊழியர்கள், தொழிலாளர் இயக்கம், முத்தரப்புப் பங்காளிகள் என விருது பெறும் மொத்தம் 105 பேரை தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) அறிவித்துள்ளது.
இதன் தொடர்பிலான கூடுதல் செய்திகள் நாளைய (மே 24) தமிழ் முரசில்!
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online