சிங்கப்பூரில் இன்று (ஜூன் 19) நண்பகல் நிலவரப்படி புதிதாக 142 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41,615 ஆகியுள்ளது.
இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் ஒன்று உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையது என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அந்த நபர் சுற்றுப் பயணிகளுக்கான விசா வைத்திருப்பவர் என்றும் அவர் தற்போது சிறையில் இருக்கும் நபர் எனவும் இன்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
வெளிநாட்டுப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் நடப்புக்கு வருவதற்கு முன்பு சிங்கப்பூருக்கு வந்த அந்த நபர், சாங்கி சிறை வளாகத்தில் ஜூன் 6ஆம் தேதி அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவர் மற்ற கைதிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 8ஆம் தேதிக்குப் பிறகு, சிங்கப்பூரில் பதிவான ஆகக் குறைவான கிருமித்தொற்று எண்ணிக்கை இன்று பதிவாகியுள்ளது. ஏப்ரல் 8 அன்றும் இதே எண்ணிக்கையிலான கிருமித்தொற்று பதிவானது குறிப்பிடத்தக்கது.
மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.
இதன் தொடர்பிலான கூடுதல் விவரங்களை அமைச்சு பின்னர் வெளியிடும்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online