ஒவ்வொரு தேர்தலின்போதும் தங்கள் அணியின் வேட்பாளர்களை ஒட்டுமொத்தமாகப் பார்ப்பதாகவும் அதன்படி இந்த ஆண்டின் மக்கள் செயல் கட்சி (மசெக) வேட்பாளர்கள் அணியில் சமநிலை நிலவுவதாக தான் நம்புவதாகவும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
“ஒவ்வொரு முறையும் வேட்பாளர்களைத் நூற்றுக்கணக்கானோரிலிருந்து தேர்ந்தெடுக்கிறோம். அதிலிருந்து இம்முறை 27 வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். இது எப்போதும் சுலபமான ஒன்று என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் இப்போதைய புதிய வேட்பாளர்களைப் பார்க்கும்போதும் மீண்டும் போட்டியிடும் வேட்பாளர்களைப் பார்க்கும்போதும் ஒட்டுமொத்தத்தில் இதுதான் போட்டிக்கான மிக வலுவான குழு என்று உணர்ந்தோம்,” என்றார் மசெகவின் தலைமைச் செயலாளரான திரு லீ.
இன்று நடைபெற்ற மசெகவின் மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பிரதமர் லீ இவ்வாறு கூறினார். இவ்வாண்டின் பொதுத் தேர்தலில் மசெக புதிய இந்திய வேட்பாளர்கள் போட்டியிடாததற்கு அவர் விளக்கம் அளித்தார்.
இந்த முறை புதிய இந்திய வேட்பாளர்கள் இல்லை என்றாலும் ஏற்கெனவே பல இந்தியர்கள் அமைச்சர்களாக உள்ளனர் என்றும் எந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஓய்வு பெறவில்லை என்பதையும் பிரதமர் லீ சுட்டினார்.
எத்தனை புதியவர்கள் வருகிறார்கள் என்பதைவிட மொத்தமாக எத்தனை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்றார் அவர்.
அவ்வகையில் புதிய நாடாளுமன்றத்தில் இந்திய உறுப்பினர்கள் இந்திய சமூகத்தையும் தங்கள் வாக்காளர்களையும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
“மசெகவில் சமசீரான நிலையில் வேட்பாளர்கள் உள்ளார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் புதிய இந்திய, மலாய், சீன வேட்பாளர்களைத் தொடர்ந்து தேடுவேன் என்றார் பிரதமர்.
அமைச்சர் சண்முகம் கருத்து
இதனிடையே, சொங்ஃபூ பள்ளியில் இன்று தமது குழுவினருடன் வேட்புமனுத் தாக்கல் செய்த சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், மக்கள் செயல் கட்சியின் இரண்டாம் உதவித் தலைமைச் செயலாளர் சான் சுன் சிங் கடந்த வாரம் கூறியது போல, இந்தியர்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் வலுவாக உள்ளது என்று இன்று தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை யாரும் ஓய்வுபெறவோ வெளியேறவோ இல்லை. வெளியேறிய பிற இனத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதிலாகத்தான் புதிய வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்படியே உள்ளனர்.
“2019 புள்ளிவிவரப்படி சிங்கப்பூர் குடிமக்கள் தொகையில் இந்தியர்களின் விகிதம் 7.5 விழுக்காடு. ஆனால் நாடாளுமன்றத்தில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் 9.7 விழுக்காடு.
“இதில் ஒதுக்கீட்டு முறை எதுவும் இல்லை. ஒரு சமநிலையைத்தான் நாங்கள் கட்டிக்காக்க விரும்புகிறோம்,” என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
சிங்கப்பூருடன் இந்திய சமூகமும் கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் முன்னேறியுள்ளது. ஆனால் அனைத்துலக நாடுகளிலிருந்து வரும் போட்டி தொடர்ந்து கடுமையாக இருக்கும் என்பதால் அதனால் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள சமூகம் தயாராக வேண்டும் என்றும் அமைச்சர் சண்முகம் வலியுறுத்தினார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online