பிரதமர் லீ சியன் லூங் புதிய அமைச்சரவையை இன்று (ஜூலை 25) அறிவித்தார்.
அதில் ஆறு அமைச்சுகளுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்த 7 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர்.
அவர்களில் 55 வயதான டாக்டர் டான் சீ லெங் முழு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பிரதமர் அலுவலக அமைச்சராகவும் மனிதவள அமைச்சு, வர்த்தக, தொழில் அமைச்சு ஆகியவற்றின் இரண்டாம் அமைச்சராகவும் பொறுப்பேற்பார்.
திரு லாரன்ஸ் வோங் கல்வி அமைச்சராகிறார். திரு டெஸ்மண்ட் லீ தேசிய வளர்ச்சி அமைச்சராகிறார்.
கல்வி அமைச்சராகப் பணியாற்றிய திரு ஓங் யி காங், அடுத்து போக்குவரத்து அமைச்சராகிறார். முன்பு போக்குவரத்து அமைச்சராக இருந்த திரு கோ பூன் வான் அரசியலிலிருந்து ஒய்வுபெற்விருப்பாதல். அந்தப் பதவிக்கு திரு ஓங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சுற்றுப்புற, நீர்வள அமைச்சு அதன் எதிர்காலச் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு என பெயர் மாற்றம் கண்டுள்ளது. அதன் அமைச்சராகிறார் திருவாட்டி கிரேஸ் ஃபூ.
முன்பு சுற்றுப்புற, நீர்வள அமைச்சராக இருந்த திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சராகிறார்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், நிதியாமைச்சராகத் தொடர்வதுடன், பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் கூடுதல் பொறுப்பை ஏற்கிறார்.
மூத்த துணை அமைச்சர்களாக இருந்த இருவர் அமைச்சர்களாகியுள்ளனர். திரு எட்வின் டோங் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சராகவும் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் பிரதமர் அலுவலக அமைச்சராகவும் கல்வி மற்றும் வெளியுறவு அமைச்சுகளின் இரண்டாம் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திரு டியோ சீ ஹியன் மூத்த அமைச்சராகவும், தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் தொடர்கிறார்.
திரு தர்மன் சண்முகரத்னம் மூத்த அமைச்சராகவும் சமுதாய கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் தொடர்கிறார்.
திரு கா. சண்முகம், திரு எஸ் ஈஸ்வரன், டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் கடந்த அமைச்சரவையில் வகித்த பதவிகளைத் தொடர்ந்து வகிக்கின்றனர்.
திருவாட்டி இந்திராணி ராஜா பிரதமர் அலுவலக அமைச்சராகத் தொடர்வதுடன் தேசிய வளர்ச்சி, நிதி ஆகியவற்றின் இரண்டாம் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் லீ அமைச்சரவையை இஸ்தானாவில் அறிவித்தது ஃபேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.