சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான எல்லைகளை விரைவில் திறந்துவிட வேண்டும் என்று ஜோகூர் முதலமைச்சர் ஹஸ்னி முகம்மது தெரிவித்துள்ளார்.
எல்லைகள் மூடப்பட்டிருப்பது தொடர்ந்தால், வேலையிழக்கக்கூடிய 100,000 மலேசியர்களுக்கு வேலைகளை உருவாக்கும் திறன் ஜோகூர் அரசாங்கத்துக்கு இல்லை என்றும் திரு ஹஸ்னி குறிப்பிட்டுள்ளார்.
ஜோகூரில் ஏற்கெனவே வேலையின்மை சாதனை அளவாக 18 விழுக்காடாக இருப்பதாகவும் சுமார் 35,000 பேர் வேலையின்றித் தவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“மக்களின் வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்துக்கும் இடையேயான சமநிலையை மத்திய அரசாங்கம் காண வேண்டிய தருணம் வந்துவிட்டது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைகள் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பிறகு, நகர்ப்புறத்தில் இருக்கும் 5 முதல் 10 விழுக்காட்டு வர்த்தகங்கள் மூடப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்ட அவர், ஜோகூரின் பொருளியலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
மலேசியாவில் 2013ஆம் ஆண்டிலிருந்து ஜோகூரின் வர்த்தகம்தான் அதிகம் என்றும் அது தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கு இடையிலான எல்லையை முற்றிலும் திறந்துவிடும் வேளையில் கொவிட்-19 சூழலை கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதன் தொடர்பில் பிரதமர் முஹைதீன் யாசினுடன் தொடர்பில் இருப்பதாக திரு ஹஸ்னி தெரிவித்தார்.
ஜோகூரில் கொஞ்ச நாட்களாகவே கிருமித்தொற்று இல்லாத நிலையில், சிங்கப்பூருடன் தினசரி போக்குவரத்துக்குத்திறந்து விட இது உகந்த நேரம் என்றும் அவர் தெரிவித்தார்.
முதலில் மாணவர்களும் பிறகு ஊழியர்களும் சென்று வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து 5,542 பேர் எல்லைகளைத் தாண்டி பயணம் செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.