சிங்கப்பூரை கொவிட்-19க்கு எதிராகப் பாதுகாக்கும் அதே வேளையில், சுற்றுப் பயணிகளை ஈர்க்கும் பொருட்டு, இங்கு வந்த பிறகு அவர்கள் இரு வார காலத்துக்கு வசிப்பிடத்தில் தங்கியிருக்க (SHN) வேண்டிய தேவை இல்லாதபடிக்கு புதிய நடைமுறைகள் திட்டமிடப்படுகின்றன.
சுற்றுப் பயணிகளுக்கு கண்டிப்பான, அடிக்கடி பரிசோதனை செய்வது, அவர்களது நடமாட்டத்தைக் கண்காணிப்பது, உள்ளூர் சமூகத்திடமிருந்து அவர்களைப் பிரிப்பது போன்ற நடவடிக்கைகள் அவற்றில் அடங்கும் என்று இன்று (அக்டோபர் 6) நாடாளுமன்றத்தில் போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
நாட்டின் பொருளியல் மீட்சிக்கு, சிங்கப்பூர் விமானப் பயண முனையமாக சிங்கப்பூரின் நிலை, சிறந்த விமானப் பயணத் தொடர்பு ஆகியவை முக்கியம் என்றார் அவர்.
சுற்றுப் பயணிகளை அனுமதித்தாலும் கிருமித்தொற்று அபாயத்தை நிர்வகிக்கும் வழிகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கு பொருளியல் ரீதியில் முக்கியமான, ஆனால், கிருமித்தொற்று விகிதம் அதிகம் இருக்கும் நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இது முக்கியம் என்றார் அமைச்சர்.
நீண்ட நாட்களாகப் பிரிந்திருப்போர் இங்கு திரும்புவதற்கும் இது வழி வகுக்கும் என்றார் அவர்.
சிங்கப்பூர் தனது எல்லைகளைத் திறக்கத் தொடங்கியுள்ளது என்பதையும், சிங்கப்பூரைப்போல கொவிட்-19 சூழலை கட்டுப்படுத்திய பிறகு அங்கு பயணம் செய்யலாம் என்பதையும் உலகுக்கு தெரிவிக்க விரும்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
“கிருமித்தொற்று அதிகம் இருக்கும் நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வர விரும்புவோர், பரிசோதனை, தனிமைப்படுத்தல், தடமறிதல் போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு இங்கு வரலாம்,” என்றார் அவர்.
கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும்போது விமானப் பயணம் பழைய நிலைக்குத் திரும்பும். ஆனால், அதுவரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
சிங்கப்பூரில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டது போலவே, அனைத்துலக எல்லைகளும் படிப்படியாகத் திறந்துவிடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.